காசோலை ஊடாக இடம்பெற்ற பாரிய பண மேசடி முதல் தடவையாக இலங்கையில் பதிவானது - நான்கு பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, May 3, 2021

காசோலை ஊடாக இடம்பெற்ற பாரிய பண மேசடி முதல் தடவையாக இலங்கையில் பதிவானது - நான்கு பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது

(செ.தேன்மொழி)

வீட்டு நிர்மாணப் பணிகளுக்காக இரும்பு கம்பிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றுக்கு சொந்தமான வங்கி கணக்கொன்றில் போலி காசோலையை வழங்கி 430 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த வங்கி ஊழியர் ஒருவர் உட்பட நான்கு பேரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வீட்டு நிர்மாணப் பணிகளுக்காக இரும்பு கம்பிகளை உற்பத்தி செய்துவரும் நிறுவனமொன்றுக்கு சொந்தமான வங்கி கணக்கில் போலி கசோலையை வழங்கி பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மிகவும் சூட்சகமான முறையில், குறித்த நிறுவனத்துக்கு சொந்தமான காசோலை போன்று போலி காசோலை புத்தகமொன்றை தயாரித்துள்ளதுடன், அந்த நிறுவனத்தின் ஊழியர்களைப் போன்று தங்களை அடையாப்படுத்திக் கொண்டே சந்தேகநபர்கள் இவ்வாறு பண மோசடி செய்துள்ளனர். இதன்போது சந்தேகநபர்களினால் 430 இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த போலி காசோலை புத்தகம் ஹங்வெல்ல பகுதியில் காணப்படும் அச்சகம் ஒன்றிலே அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவந்துள்ளது. பின்னர் அந்த நிலையத்தின் உரிமையாளரான 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக ரணாலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் நாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த வங்கியின் ஊழியரான களனி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்களைப் போன்று காசோலையை மாற்றுவதற்காக வங்கிக்குச் சென்றதாக கூறப்படும், தனியார் நிறுவனமொன்றின் நிறைவேற்று பிரிவின் அதிகாரியான 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்படவுள்ளனர்.

காசோலை ஊடாக இடம்பெற்ற பாரிய பண மேசடி முதல் தடவையாக நாட்டில் பதிவாகியுள்ளதுடன், இது தொடர்பில் காசோலைகள் ஊடாக பாரிய கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும். இந்நிலையில், மேற்படி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment