(எம்.மனோசித்ரா)
புத்தாண்டின் பின்னர் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட அதேவேளை, மிகக் குறைந்தளவானோரே குணமடைந்தனர். எனவே இடைநிலை பராமரிப்பு நிலையங்களிலும் முழுமையாக தொற்றாளர்கள் சிகிச்சை பெறுவதால் கடந்த ஓரிரு தினங்களாக இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்படுகிறது. அவ்வாறானவர்களை இன்று திங்கட்கிழமை இடைநிலை பராமறிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு பின்னரே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அதற்கமைய 19 ஆம் திகதி இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் சுமார் 10 நாட்கள் சிகிச்சையின் பின்னர் கடந்த இரு தினங்களின் பின்னரே வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பியிருப்பார்கள்.
எனவே கடந்த நாட்களாக புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டார்களே தவிர குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். இதன் காரணமாக இடை நிலை பராமறிப்பு நிலையங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதுவரையில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற பெரும்பாலான இடை நிலை பராமறிப்பு நிலையங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. எனவே தற்போதுள்ள இடை நிலை பராமறிப்பு நிலையங்களில் படுக்கைகளின் அளவை அதிகரிப்பதற்கும், புதிதாக இடை நிலை பராமறிப்பு நிலையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே தற்போது வீடுகளிலேயே வைக்கப்பட்டுள்ள தொற்றாளர்களை இன்று சிகிச்சைக்காக இடை நிலை பராமறிப்பு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment