அமெரிக்காவின் மிகப்பெரிய எரிபொருள் குழாய் இயக்குநரகமான கொலோனியல் பைப்லைன் பணயத்தீ நிரல் (Ransomwar) சம்பந்தப்பட்ட சைபர் தாக்குதலால் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அவசரகால சட்டத்தை வெளியிட்டதுடன், செயலிழந்த குறித்த இயக்குநரகத்தின் சேவையை மீட்டெடுக்கவும் தொடர்ந்தும் போரடி வருகிறது.
நிறுவனம் டெக்சாஸிலிருந்து நியூ ஜெர்சி வரை 8,850 கி.மீ (5,500 மைல்) க்கும் அதிகமான நீளமுள்ள ஒரு குழாய் வலையமைப்பை இயக்குகிறது.
கொலோனியல் பைப்லைன் ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பீப்பாய் பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள் மற்றும் பிற சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை அதன் வலையமைப்பு முழுவதும் கொண்டு செல்கிறது.
மேலும் இது அமெரிக்க கிழக்கு கடற்கரை எரிபொருள் விநியோகத்தில் 45 சதவீதத்தை கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்சமயம் அமெரிக்காவில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலை சட்டம் எரிபொருளை சாலை வழியாக கொண்டு செல்ல உதவுகிறது.
அதன்படி பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள் மற்றும் பிற சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்வதற்காக மொத்தம் 18 மாநிலங்களுக்கு தற்காலிக சேவை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமைகளினால் திங்களன்று எரிபொருள் விலை 2-3% உயரக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், ஆனால் கொலோனியல் பைப்லைனின் செயலிழப்பை மீட்டெடுக்க அதிக நேரம் சென்றால் பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமொண்டோ, வொஷிங்டன் மேலும் கடுமையான எரிபொருள் விநியோக இடையூறுகளைத் தவிர்க்கவும், கொலோனியல் பைப்லைன் இயக்குநரகத்தின் சேவையை விரைவில் மறுதொடக்கம் செய்யவும் உதவுவதாகக் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
'Ransomware' என்பது தீநிரல்களில் ஒன்றாகும், இந்த நச்சுநிரலானது, முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு உருசியாவில் அதிகம் உணரப்பட்டது. அதன் பிறகு உலகெங்கும் உணரப்பட்டது. இது ஒரு கணினியின் கட்டகத்தை, தனது நிரல் வன்மையால், குறியீட்டுச் சொற்களாக, தகவல் மறைப்பு செய்து, பூட்டி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணுகலை மீண்டும் பெற கட்டணம் கோருகிறது.
No comments:
Post a Comment