எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுமா...? - விளக்கமளிக்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Sunday, May 2, 2021

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுமா...? - விளக்கமளிக்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டுக்குள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அத்துடன் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கப்படாமல் நிலையாக வைத்திருக்க முடியும் என்ற உறுதியை வழங்கினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என்ற உறுதியை வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டுக்குள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புரம்பானது. அவ்வாறான எந்த நிலையும் இல்லை. தேவையான எரிபொருள் தொகை நாட்டுக்குள் இருப்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன். 

ஒவ்வொரு நாளும் காலை 7 மணியளவில் நாட்டில் இருக்கும் எரிபொருள் வகைகளின் அளவு குறித்த தொகையை குறுந்தகவல் செய்தி ஊடாக நான் பெற்றுக் கொள்கின்றேன். இது தொடர்பாக நான் தனிப்பட்ட முறையிலும் நாளாந்தம் தேடிப்பார்க்கின்றேன். அதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றார்.

மேலும், எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாகவும் பலராலும் தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருட்களின் விலை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. 

இருந்தபோதும் உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று டொலரின் பெறுமதியும் அதிகரித்து செல்கின்றது. எமது நாட்டில் 2019 செப்டெம்பர் 1ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் தற்போதும் எரிபொருட்களினால் ஏற்பட்டு வரும் நஷ்டத்தை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் பொறுப்பேற்றுக் கொண்டு, மக்களுக்கு அதன் நிவாரணத்தை வழங்கி வருகின்றோம். இந்த நஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலை வந்தால் அது தொடர்பில் நாங்கள் மக்களுக்கு அறிவிப்போம். அதனால் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க இதுவரைக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment