நீதிமன்ற உத்தரவையும் மீறி ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக போராட்டம் : சுலோகங்களை பறித்து கட்டாய பீ.சி.ஆர் பரிசோதனை ! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 2, 2021

நீதிமன்ற உத்தரவையும் மீறி ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக போராட்டம் : சுலோகங்களை பறித்து கட்டாய பீ.சி.ஆர் பரிசோதனை !

நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷத்துடன் கல்முனை மாநகரில் இன்று (02) மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்க ஆயத்தமான நிலையில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எம்.ஏ. ஜவாத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப், கல்முனை மாநகர சபை உறுப்பினர் வை.கே. ரஹ்மான், கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான், கலில் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், உயர்பீட உறுப்பினர் மான்குட்டி ஜுனைதீன் ஆகியோருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இவ்வுத்தரவை கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் கே.எச். சுஜித் பிரியந்த பெயர் குறித்தவர்களிடம் கையளித்தார்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி கல்முனை நகர் மத்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அம்பாறையின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த மக்கள் பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் பங்கேற்றனர். 

தலைவர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய், ரிஷாத்தை அநீதியான முறையில் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்காதே!, ரிஷாத்தை நள்ளிரவில் கைது செய்ததன் பின்னணி என்ன ?, யாரைத் திருப்திப்படுத்த இந்தக் கைது ? போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி கோஷமெழுப்பிய போது கல்முனை பொலிஸார் புகுந்து இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததுடன் சுலோகங்களை பறித்து போராட்டக்காரர்களுக்கு கட்டாய பீ.சி.ஆர் பரிசோதனையும் செய்தனர்.

கல்முனை பொலிஸாரின் கெடுபிடியினால் அங்கிருந்து வெளியாகி சென்ற போராட்டக்காரர்கள் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் தலைவர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய், ரிஷாத்தை அநீதியான முறையில் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காதே!, ரிஷாத்தை நள்ளிரவில் கைது செய்ததன் பின்னணி என்ன ?, யாரைத் திருப்திப்படுத்த இந்தக் கைது ? போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி கோஷமெழுப்பி நீளமான பதாதைகளை தாங்கியவாறு சமூக இடைவெளிகளைப் பேணி இந்தப் போராட்டத்தை மீண்டும் தொடர்ந்து மேற்கொண்டனர். 

இதன்போது ரிஷாத்தின் கைதுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் போராட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பிலான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முதுனபின், அகில மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஸ்ரப் தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் உட்பட பலரும் இந்தப்போராட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

போராட்டம் இடம்பெற்ற வேளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் தலைமையிலான பொலிஸார் ஆங்காங்கே குவிக்கப்பட்டு வீதி ஒழுங்கமைப்பிலும், ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டமைப்பதிலும் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment