அசேல சம்பத் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

அசேல சம்பத் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

(செ.தேன்மொழி)

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் சிறைச்சாலைக்குள் வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் தெரிவிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கடந்த மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, அந்த மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

இதன்போது கடந்த மாதம் 20 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு, சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பினால் எமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

இது தொடர்பில் கவனம் செலுத்திய சிறைச்சாலைகள் தலைமையகம், சிறைச்சாலையின் உதவி அதிகாரி மற்றும் போகம்பர சிறைச்சாலையின் அதிகாரியொருவரையும் மேற்படி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்திருந்தது. அதற்கமைய அசேல சம்பத் என்ற நபரை சிறைக்குள் வைத்து தாக்கியதற்கான எந்தவித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை. 

எனினும் 25 ஆம் இலக்க அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர் 29 ஆம் அறையில் இருந்ததன் காரணமாக, அவர்களை தங்களுக்கு உரிய அறையில் இருக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக மட்டுமே தெரியவந்துள்ளது.

அசேல சம்பத் என்ற நபர் கடந்த மாதம் 26 ஆம் திகதி வரையிலும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், அதன்போது அவர் இது தொடர்பில் எவ்வித முறைப்பாடும் அளித்திருக்கவில்லை. 26 ஆம் திகதி பிணையில் சென்ற பின்னர் தனியார் வைத்தியசாலையில் அனுமதியாகியிருந்தார். இதன் பின்னரே அவர் சிறைச்சாலைக்குள் வைத்து தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன 

இதனைத் தொடர்ந்து அசேல சம்பத்தை வாக்கு மூலம் வழங்குவதற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர் இதுவரையில் வந்திருக்கவில்லை. சிறைக் கைதிகளை பாதுகாப்பும் அமைப்பின் தலைவருக்கு நான்கு முறை தொலைபேசி ஊடாக அறிவித்திருந்த போதிலும் அவரும் வருகைதரவில்லை.

இது போன்ற பிரசாரங்களினால் சிறைச்சாலைகள் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் இதன் உண்மை நிலவரத்தை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் தெரிவிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment