முஸ்லிம்களை மடையர்கள் என்று நினைத்து ஜனாஸா பெட்டிகளை எரித்ததாக கூறுகின்றார்கள் - முன்னாள் அமைச்சர் அமீர் அலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 7, 2021

முஸ்லிம்களை மடையர்கள் என்று நினைத்து ஜனாஸா பெட்டிகளை எரித்ததாக கூறுகின்றார்கள் - முன்னாள் அமைச்சர் அமீர் அலி

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் மடையர்கள் என்று நினைத்து கொண்டு முஸ்லிம் ஜனாஸா பெட்டிகளை எரித்ததாக கூறுகின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேசத்திற்குட்பட்ட மஜ்மா நகர் கிராம மக்களின் நன்மை கருதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் முயற்சியில் முன்னாள் பிரதியமைச்சர் உசைன் பைலா குடும்பத்தினரால் 50 வீதி மின் விளக்குகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கல்குடாப் பிரதேசத்தில் ஒரு சில அரசியல் ஊழியர்கள் கல்குடாப் பிரதேசத்திற்கு துரோகம் செய்துள்ளனர். அத்தோடு உலமாக்கள் மற்றும் படித்தவர்கள் கல்குடா அரசியலுக்கு துரோகம் செய்துள்ளனர். இவர்கள் அரசியலை பணமாக்கியதன் பலன் இத்தனை ஜனாசாக்கள் எரிக்கப்படடது.

இந்த நாடு முஸ்லிம்களை போட்டு சின்னா பின்னமாக்குகின்றது. இந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை இவ்வளவு கேவலப்படுத்துவது, இன்னும் முஸ்லிம்களை கேவலப்படுத்த போகும் நிலைமை உள்ளது என்றார்.

3.5 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட அல் மஜ்மா கிராமம் காடு, வயல் மற்றும் பயிர்ச் செய்கை நிலங்களைக் கொண்டமைந்த பிரதேசமாகும். 

வயல் அறுவடை முடிவடைந்ததைத் தொடர்ந்து போதியளவு வெளிச்சமின்மை காரணமாக தினமும் இரவு வேளைகளில் விஷ ஜந்துக்கள், யானைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உயிராபத்துக்களும் சொத்து மற்றும் நிரந்தர நிலப் பயிர்ச் சேதங்களும் ஏற்படுகின்றது. 

இவ்வாறான நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அல் மஜ்மா கிராம அபிவிருத்திச் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கமைய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் முயற்சியில் முன்னாள் பிரதியமைச்சர் உசைன் பைலா குடும்பத்தினரால் 50 வீதி மின் விளக்குகள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

அல் மஜ்மா கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஏ.எல். சமீம் தலைமையில் இடம்பெற்ற மின் விளக்குகளைக் கையளிக்கும் குறித்த நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பி.எம். ஜௌபர், ஏ.ஜி. அமீர், ஜெஸ்மின், ஜெமீலா, நபீரா மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இவ்வுதவியைப் புரிந்த உசைன் பைலா குடும்பத்தினருக்கும் இப்பிரதேச மக்களின் நன்மை கருதி இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் வருகை தந்த அனைவருக்கும் பிரதேச மக்கள் சார்பாக கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஏ.எல். சமீம் நன்றி தெரிவித்தார்.

மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்

No comments:

Post a Comment