(எம்.மனோசித்ரா)
அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுமாயின் அது முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்ட செயற்பாடாகவே அமையும். இந்த நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டால் அரசாங்கத்திற்கு மிக நெருக்கமான எண்ணெய் இறக்குமதி நிறுவனங்களுக்கு மாத்திரமே அனுமதி கிடைக்கப் பெறும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அனுமதிபத்திரத்தின் அடிப்படையில் பாம் எண்ணெயை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் அரசாங்கத்திற்கு நெருங்கிய நிறுவனங்களுக்கு மாத்திரமே அனுமதி கிடைக்கப் பெறும்.
ஆனால் வடை உள்ளிட்ட சிற்றுண்டிகள் விற்பனை செய்யும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் நாட்டில் உள்ளனர். இவர்கள் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தே எண்ணெய்யை பெற்றுக் கொள்வர். எனவே இவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் தீர்வு யாது ?
அனுமதப்பத்திரத்தின் அடிப்படையில் எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதியளிக்கும் நடைமுறை அமுல்படுத்தப்படுமாயின், அது முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்ட செயற்பாடாகவே அமையும்.
இதன் மூலம் சகலருக்கும் தீர்வு கிடைக்கப் பெறாது. அத்தோடு கடந்த 2014 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பாம் எண்ணெய் உற்பத்தியை ஊக்குவித்தார்.
எனவே இவ்வாறு மக்களுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் செயற்படாமல், நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment