குறைபாடுகளுடன் தேர்தலை நடத்தினால் எதிர்காலத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறும், கடந்த காலங்களில் மாகாண சபைகளின் ஊடாக முறையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவில்லை - அமைச்சர் ரொஷான் ரணசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, April 2, 2021

குறைபாடுகளுடன் தேர்தலை நடத்தினால் எதிர்காலத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறும், கடந்த காலங்களில் மாகாண சபைகளின் ஊடாக முறையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவில்லை - அமைச்சர் ரொஷான் ரணசிங்க

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்படும் நல்லாட்சி அரசாங்கம் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட்டதை போன்று தற்போதைய அரசாங்கமும் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படாது. மாகாண சபை தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது அவசியமானதாகும். குறைபாடுகளுடன் தேர்தலை நடத்தினால் எதிர்காலத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் மாகாண சபை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் மாகாண சபைகளின் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகள் உச்ச பயனை நாட்டு மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். 1000 மில்லியன் நிதி ஒன்பது மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் சிறந்த முறையில் நிறைவு பெறவில்லை. மாகாண சபைகளின் செயற்பாடு இனிவரும் காலங்களில் மாகாண சபை அமைச்சினால் நேரடியாக கண்காணிக்கப்படும்.

அபிவிருத்தி பணிகள் மாகாண சபைகளினாலும், மத்திய அரசாங்கத்தினாலும் இரு வேறுப்பட்ட திட்டமிடலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பெருந்தொகையான நிதி வீண்விரயமாக்கப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. 

பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் மாகாண சபைகளை மையப்படுத்தி மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே அபிவிருத்தி பணிகளின் உச்ச பயனை நாட்டு மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல் மாகாண சபை தேர்தலை வெகுவிரைவில் நடத்துவோம். நல்லாட்சி அரசாங்கத்தை போன்று அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட வேண்டிய தேவை கிடையாது. மாகாண சபைகளுக்கு மக்களின் பிரநிதிகள் ஜனநாயக முறைக்கமைய தெரிவு செய்யப்படுவார்கள். 

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி மாகாண சபைகளை சிறந்த முறையில் செயற்படுத்துவது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும். அதேபோல் அபிவிருத்தி பணிகளின் பெறுபேற்றை நாட்டு மக்கள் முழுமையாக பெற்றுக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களில் மாகாண சபைகளின் ஊடாக முறையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. அனைத்து மாகாணங்களுக்கும் 1000 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மலசலகூடங்களை போன்று பெயரளவிலான அபிவிருத்தி பணிகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. அபிவிருத்திகள் வெறும் காட்சிப் பொருளாக மாத்திரம் காணப்படுகிறது.

தவறுகளை திருத்திக் கொள்வதற்கு அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் மக்களின் வரிப்பணம் வீண்விரயமாக்குவதற்கு இடமளிக்க முடியாது. கிராமபுற மக்கள் சுட்டிக்காட்டியுள்ள அபிவிருத்தி பணிகளை துரிதமாக செயற்படுத்துவது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அபிவிருத்தி பணிகள் எக்காரணிகளுக்காகவும் இடை நிறுத்தக்கூடாது.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. வகுத்துள்ள திட்டங்களை மாகாண சபைகள் முறையாக செயற்படுத்த வேண்டும். மாகாண சபைகளில் காணப்படும் அடிப்படை குறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

No comments:

Post a Comment