வெல்லவாய பகுதியில் வெஹரயாய என்ற கிராமத்தில் தனது மகனை, கொடூரமாக தாக்கிய தந்தையை, வெல்லவாய பொலிசார் இன்று (1) கைது செய்துள்ளனர்.
31 வயதுடைய குறித்த தந்தை மது போதையில் வீடு வந்து, தனது சொற்படி மகன் நடக்கவில்லையென்று, தனது எட்டு வயது நிரம்பிய மகனை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்நிலையில் தாக்கப்பட்ட குறித்த சிறுவன் மறுதினம் பாடசாலைக்கு சென்ற போது, நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே, வகுப்பில் அமர்ந்திருந்தான். இதனை அவதானித்த பாடசாலை அதிபர், அச்சிறுவனிடம் காரணத்தை வினவியுள்ளார்.
இதன்போது சிறுவன் தனது தந்தை தன்னை அடித்தமையைக் கூறி, தான் தாக்கப்பட்ட உடம்பின் பாகங்களையும் காட்டினான். இவ்விடயத்தை அதிபர் வெள்ளவாயப் பொலிசாருக்கு அறிவித்தார்.
பொலிசார் பாடசாலைக்கு விரைந்து, சிறுவனின் நிலையைக்கண்டு, அச்சிறுவனை வெள்ளவாய அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதையடுத்து, சிறுவனின் வாக்குமூலத்திற்கமைய, சிறுவனின் தந்தையை பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் பின்னர், வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனின் உடலெங்கும் பலத்த காயங்கள் தென்படுவதாகவும், அக்காயங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வைத்தியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment