தெங்கு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பளை கரந்தாய் காணிகளை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
புதன்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சுபீட்சத்துக்கான நோக்கு செயலணியின் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
கலந்துரையாடலில் யாழ். கிளிநொச்சி மாவட்டங்களில் பனை, தென்னை பயிர் செய்கை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,பாதக சாதக விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் நானும் ஒன்றாக பாராளுமன்றம் சென்றவர்கள் பாராளுமன்றத்திலும் அருகருகே அமர்ந்திருந்தவர்கள். அந்த வகையில் எமது பிரச்சினையை அவர் தீர்த்து வைப்பார் என நம்புகிறேன் என தெரிவித்து பிரச்சினையை கூறினார்.
கரந்தாய் கிராமத்தில் பல ஆண்டுகளாக சுமார் 52 குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் அவர்களை வெளியேற வேண்டுமென தென்னை அபிவிருத்திச் சபை இரவோடிரவாக அவர்களின் வாழ்விடங்களை பிடுங்கி எறிந்து அவர்களை நடு வீதியில் விட்டுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் வழக்கு தொடர்ந்ததன் பயனாக மன்று மக்களை குறித்த காணியில் மீண்டும் செல்வதற்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில் தாங்கள் அமைச்சராக இருக்கின்ற நிலையில் அங்கு வாழும் வறிய மக்களுக்காக குறித்த காணிகளை அவர்களுக்கு மீண்டும் பகிர்ந்து அளிப்பதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
குறித்த விடயம் தொடர்பில் பதிலளித்த அமைச்சர் நீதிமன்ற விடயங்களை ஆராய்ந்து அப்பகுதி மக்களுக்கே காணிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாகக் கூறினார்.
கோப்பாய் குறூப் நிருபர்
No comments:
Post a Comment