இலங்கையின் மனித உரிமை குறித்து கருத்துரைக்கும் தார்மீக உரிமை மேற்குலக நாடுகளுக்கு கிடையாது - இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டு வருவது நகைப்புக்குரியது : எஸ்.பி திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, March 12, 2021

இலங்கையின் மனித உரிமை குறித்து கருத்துரைக்கும் தார்மீக உரிமை மேற்குலக நாடுகளுக்கு கிடையாது - இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டு வருவது நகைப்புக்குரியது : எஸ்.பி திஸாநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் மனித உரிமை குறித்து கருத்துரைக்கும் தார்மீக உரிமை மேற்குலக நாடுகளுக்கு கிடையாது. குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜெனிவா விவகாரத்தில் தீர்வு காண அரசாங்கம் ஒருபோதும் இராணுவத்தை காட்டிக் கொடுக்காது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் மனித உரிமை குறித்து கருத்துரைப்பதற்கு மேற்குலக நாடுகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் எவ்வித மனித உரிமை மீறல் குற்றங்களும் இடம்பெறவில்லை.

30 வருட யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் 12 ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளுக்கு அரசாங்கம் புனர்வாழ்வளித்தது இது உலகிற்கே சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக கருதப்பட்டது.

குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மனித உரிமை பேரவையின் சுயாதீனத்தன்மை கூட விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மனித உரிமை பேரவையை கடுமையாக விமர்சித்து 2018ஆம் ஆண்டு அமெரிக்கா பேரவையில் இருந்து வெளியேறியது. இவ்வாறான நிலையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வருவது நகைப்புக்குரியது.

ஜெனிவா விவகாரத்தில் தீர்வு காண அரசாங்கம் இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக் கொடுக்காது. இராணுவத்தினரை பாதுகாக்க விசேட பொறிமுறை வகுக்கப்படும். சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட வேண்டும் என்பது அவசியம் அதற்காக நாட்டின் இறையான்மையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment