இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து கடும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் - ஞானசார தேரர் சூளுரை - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து கடும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் - ஞானசார தேரர் சூளுரை

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினால் பௌத்த அமைப்புக்களை அடிபணிய வைக்க முடியாது. இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக அரசாங்கம் உரிய முறையில் செயற்படும் என்ற நம்பிக்கை கிடையாது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான அறிக்கை அரசாங்கத்தின் அரசியல் பிரச்சினையாகி விட்டது. இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக இனி கடுமையான நடவடிக்கைகளை நாடு தழுவிய ரீதியில் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து முன்னெடுப்போம் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சுதந்திர சதுக்க வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் எடுத்துரைத்துள்ளோம்.

குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அனைத்து அரசாங்கங்களும் அடிப்படைவாதத்தை வளரத்து எம்மை இனவாதிகளாக சித்தரித்தது. அனைத்து தரப்பினரது பலவீனத்தன்மையும் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலாக வெளிப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் உக்கிரத்தன்மையினை வெளிப்படுத்தியது. குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்தது யார் ? எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க முன்னெடுக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் ஆரம்பகால செயற்பாடுகள், விசாரணைகள் சிறந்த முறையில் இடம்பெற்றன. ஆனால் ஆணைக்குழுவின் செயற்பாட்டின் இறுதி பகுதி அரசியல்மயப்படுத்தப்பட்டன.

தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏதும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை. மாறாக தனிப்பட்ட முரண்பாடுகளுக்கு பழி தீர்க்கும் ஒரு களமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு செயற்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பௌத்த அமைப்புக்களை தடை செய்யும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் வரலாற்று ரீதியில் இடம்பெற்றுள்ளன. அறிக்கைகளுக்கு பௌத்த அமைப்புக்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக் கொள்கிறோம். 

நாட்டில் இனவாதத்தை தோற்றுவிக்கும் வகையில் பௌத்த அமைப்புக்கள் ஒருபோதும் செயற்படவில்லை. பௌத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை இனவாத செயற்பாடு என குறிப்பிட முடியாது.

மத கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்க முடியாது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை அரசாங்கத்துக்குள் அரசியல் பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ளது. பௌத்த நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் பொறுப்பினை பௌத்த மதத் தலைவர்கள் அனைவரும் ஒன்றினைந்து ஏற்க வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ள யோசனைகளுக்கு மகாநாயக்க தேரர்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள். அனைத்து மதத் தலைவர்களையும் ஒன்றினைத்து நாடு தழுவிய ரீதியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான கடுமையான நடடிவடிக்கைகளை இனி முன்னெடுப்போம்.

பாரம்பரிய முஸ்லிம் மக்களின் உரிமைளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. இஸ்லாமிய மத போர்வையில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படைவாதத்துக்கு எதிராகவே செயற்படுகிறோம். இதற்கு பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தினரும் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment