கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை - சபை அமர்வில் அமைதி வழி போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை - சபை அமர்வில் அமைதி வழி போராட்டம்

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரம் செல்வநாயகத்தை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்தமையை கண்டித்து பிரதேச சபை அமர்வில் அமைதி வழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பமானபோதே சபையின் உறுப்பினர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாரையும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நாம் தடை அல்ல எனவும், அவ்வாறு விசாரணைக்கு உட்படுத்துவதாயின் கிளிநொச்சி மாவட்டத்திலேயே விசாரணை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதற்காக சபை உறுப்பினர் ஜீவராசா சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து சபை 5 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரான நாகேந்திரம் செல்வநாயகம் இன்று கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும், குறித்த செயற்பாடானது மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்து இன்றைய அமர்வில் பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்ததுடன், இன்றைய தினம் குறித்த பிரதேச சபை உறுப்பினர் விசேட விடுமுறை பெற்று விசாரணைகளிற்காக சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment