சர்வாதிகார போக்குடைய சில நாடுகள் மாத்திரமே இலங்கையுடன் இணைந்து செயற்படுகின்றன, போலியான விடயங்களால் மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது என்கிறார் முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 31, 2021

சர்வாதிகார போக்குடைய சில நாடுகள் மாத்திரமே இலங்கையுடன் இணைந்து செயற்படுகின்றன, போலியான விடயங்களால் மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திடம் இராஜதந்திர அணுகுமுறைகள் இன்மையினால் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு காணப்பட்ட நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போதைய அரசாங்கத்தைப் போன்று சர்வாதிகார போக்குடைய சில நாடுகள் மாத்திரமே இலங்கையுடன் இணைந்து செயற்படுகின்றன. ஏனைய சகல நாடுகளும் எம்மை விட்டு விலகியுள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவல் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை வெற்றி கொள்ள முடியாமல் போனமை அரசாங்கத்தின் பலவீனமாகும். இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட இலங்கையின் நட்பு நாடுகள் கூட இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

குறிப்பாக ஜப்பான் எவ்வித எதிர்பார்ப்புக்களும் இன்றி இலங்கைக்கு உதவிய நாடாகும். எனினும் இம்முறை அதன் ஆதரவைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியது.

அரசாங்கத்திடம் இராஜதந்திர அணுகுமுறைகள் இன்மை மற்றும் சர்வதேசத்துடனான இணக்கம் இன்மை என்பவற்றால் இலங்கையின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல நாடுகள் எம்மிலிருந்து விலகியுள்ளன. தற்போதைய அரசாங்கத்தைப் போன்று சர்வாதிகார சிந்தனையுடைய நாடுகள் மாத்திரமே எம்முடன் உள்ளன.

நாம் உலக நாடுகளுடன் இணைந்து முன்னோக்கிச் செல்லப் போகின்றறோமா அல்லது தென் ஆபிரிக்காவைப் போன்று பழமையான ஆட்சியை நோக்கி செல்லப் போகின்றோமா? உலக நாடுகளுடன் இணைந்து பயணிப்பதில் இலங்கை தோல்வியடைந்துள்ளது.

இந்த விடயத்திலும் அரசியல் கருத்துக்களை கூறிக்கொண்டு போலியான விடயங்களால் மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றமை கவலைக்குரியதாகும் என்றார்.

No comments:

Post a Comment