(எம்.மனோசித்ரா)
காடழிப்பு, மணல் அகழ்வு உள்ளிட்ட சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமைய நேற்று (புதன்) 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஊடகப் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது பத்தேகம, தொலேகொட - கிம்பில்ல பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்ட வலயத்தில் அநாவசியமாக மரக் குற்றிகளை வெட்டிய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மரக் குற்றிகளை வெட்டுவதற்கு பயன்படுத்திய இயந்திரங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
இதேவேளை விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கெபித்திகொல்லாவ - துட்டுவௌ பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் வனப் பகுதியில் மரங்களை வெட்டிய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அதற்கு பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கதிர்காமம் பொலிஸ் பிரிவில் தம்பே பிரதேசத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரமொன்றும் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுற்றாடல் பாதிப்பு தொடர்பான சுற்றிவளைப்புக்கள் பொலிஸாரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment