2015-2019 காலப்பகுதியில் கடந்த ஆட்சியில் ச.தொ.ச நிறுவனத்துக்கு 20 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
2014 வரை இலாபமீட்டும் நிறுவனமாக இருந்த ச.தொ.ச நிறுவனம், கடந்த ஆட்சியின் போது ஏற்பட்ட பாரிய நஷ்டம் குறித்து தடயவியல் கணக்காய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
கடந்த ஆட்சியில் விநியோகஸ்தர்களுக்கு ச.தொ.ச நிறுவனம் ரூ. 08 பில்லியன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலைமை மிகவும் குழப்பமாக இருந்ததால் விசாரணைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதென்றும் அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் நளின் பெர்னாண்டோ நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
நஷ்டத்தை ஏற்படுத்தும் நிறுவனமாக இருந்த சதொச நிறுவனம், கடந்த நாட்களில் அதன் விற்பனையை 102 சதவீதம் அதிகரிக்க முடிந்ததென்றும் அவர் கூறினார்.
415 விற்பனை நிலையங்களைக் கொண்ட ச.தொ.ச வலையமைப்பில் 279 விற்பனை நிலையங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மாற்ற சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
கடந்த ஆட்சியில் ச.தொ.ச கிளைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கை எந்த வித வெளிப்படைத் தன்மையுமற்ற முறையில் இடம்பெற்றுள்ளது.
வர்த்தகத்துக்கு ஏற்ற இடங்களில் கடைகள் அமைக்கப்படவில்லையென்றும் அவர் கூறினார். சம்பந்தப்பட்ட கிளைகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சபை நிருபர்கள்
No comments:
Post a Comment