யாழ். மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகுமென எச்சரிப்பு, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென்கிறார் அரச அதிபர் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 13, 2021

யாழ். மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகுமென எச்சரிப்பு, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென்கிறார் அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து காணப்படுவதால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை சற்றுக் குறைவடைந்துள்ளது. எனினும், கடந்த 02 தினங்களாக திடீரென வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அச்சுவேலி சந்தைப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் நால்வர் மற்றும் பேருந்து நடத்துனரின் மனைவி, பிள்ளை ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சூழலில், யாழ். மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது. யாழ். நகரில் இப்போது அனைத்துச் செயற்பாடுகளும் இயல்பு நிலையிலுள்ளது. எனினும் சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அச்சுவேலி சந்தையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே நேற்று நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. 

அச்சுவேலிப் பகுதியில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், வெளி மாவட்டங்களிலுள்ள சந்தையுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். இந்நிலையில், அச்சுவேலி சந்தைப் பகுதியிலுள்ள வியாபாரிகளுக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்குச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், புதிய கொத்தணி உருவாகும் சூழல் காணப்படுவதால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றிச் செயற்பட வேண்டும். 

குறிப்பாக, பாடசாலைகள், மதஸ்தலங்கள் ஏனைய பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது க.பொ.த. பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அபாய நிலையை உணர்ந்து பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும். 

அத்தோடு, பஸ்களில் பயணிப்போர் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி இடங்களுக்கு செல்வோர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். முச்சக்கர வண்டிச் சாரதிகளும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும். இதேவேளை, அச்சுவேலி சந்தையை மூடுவதற்கு இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை யென்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment