தமிழ் மக்களைப் பயமடையச் செய்யவே படைகளையும், பொலிஸாரையும் அரசாங்கம் ஏவுகிறது - சி.வி.விக்னேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

தமிழ் மக்களைப் பயமடையச் செய்யவே படைகளையும், பொலிஸாரையும் அரசாங்கம் ஏவுகிறது - சி.வி.விக்னேஸ்வரன்

எங்களுடைய மக்களைப் பயமடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் தங்களுடைய படைகளையும், பொலிஸாரையும் ஏவி, பயங்கரவாதச் சட்டம் ஊடான கைதுகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சி.வி.விக்னேஸ்வரனை, யாழில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சந்தித்துக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதன்போது, சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “கிளிநொச்சியில் இருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும், அவர்கள் எந்தக் குற்றங்களையும் செய்யவில்லை எனவும், முக்கியமாக தங்களுடன் வீட்டிலேயே இருந்தவர்களைத்தான் ஏதோ குற்றஞ்சாட்டிக் கைது செய்துகொண்டு போனதாகவும் அவர்களின் உறவினர்கள் கூறியிருந்தார்கள்.

இது தொடர்பாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் (TID) நான் பேசியிருந்தேன். அவர்கள் கூறும் விடயங்கள் வித்தியாசமாக இருக்கின்றது. கைது செய்யப்பட்டவர்கள் புலிகளோடு சம்பந்தப்பட்டவர்கள் என்றும் புலி இயக்கத்தை மீண்டும் தொடங்குவதற்காக அவர்கள் நடவடிக்கையில் இறங்கியதாகவும் பல குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்கள்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் சிலர் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு கொரோனா தொற்று உள்ளதால் தங்காலைக்கு அனுப்பியுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளார்கள்.

ஆனால், இவற்றைப் பார்க்கும் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எங்களுடைய மக்களுக்கு ஆக்கினைகளை, பிரச்சினைகளை, தொந்தரவுகளைக் கொடுக்கின்றார்கள்.

எங்களுடைய மக்களைப் பயமடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தங்களுடைய படைகளையும், பொலிஸாரையும் ஏவிச் செய்கின்றது என்பது என்னுடைய கருத்தாகும்.

எனவே, இது தொடர்பாக நாங்கள் வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது. எங்களுடைய கட்சிக்கென தமிழ் மக்கள் சார்பிலே நீதிமன்றங்களில் நடவடிக்கை எடுப்பதற்காக சில சட்டத்தரணிகளை ஒன்றுசேர்த்து இருக்கின்றோம். அந்த அடிப்படையில் இந்த உறவினர்களை அவர்களிடம் பாரப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் இப்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறான பல பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நாங்கள் சட்ட ரீதியாக எவ்வாறு அணுகுவது என ஆராய்த்து வருகின்றோம். வெகு விரைவில் ஏதாவது ஒரு முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment