பெரும்பான்மையை இழந்ததால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது : முதலமைச்சர் நாராயணசாமி இராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Monday, February 22, 2021

பெரும்பான்மையை இழந்ததால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது : முதலமைச்சர் நாராயணசாமி இராஜினாமா

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

நாராயணசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேல் 6 மாதங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான் குமார் ஆகியோர் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் 30 பேர் கொண்ட புதுச்சேரி சட்ட சபையில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. 

ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்தது என்று எதிர்க்கட்சியினர் ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜனிடம் புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நாராயணசாமி பெரும்பான்மையை சட்ட சபையில் 22ம் திகதி (இன்று) நிரூபிக்க வேண்டும் என்று புதிதாக ஆளுநர் பொறுப்பை ஏற்ற டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன், தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் சட்ட சபையில் நாராயணசாமி அரசின் பலம் 12ஆக குறைந்தது. இது தொடர்பாக நேற்று மாலையும், இன்று காலை 8 மணிக்கும் நாராயணசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்ட சபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்ட சபையில் தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது அவர் உரையாற்றினார்.

புதுவையில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி சோனியா காந்தி, கருணாநிதியின் ஆசியாலும், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் பேராதரவாலும் நடந்து வருகிறது.

நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் பணியை செய்து வருகிறார்கள். இடைத் தேர்தலில் நான் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ், தி.மு.க.வின் ஆதரவோடு வெற்றி பெற்றேன்.

அதன் பிறகு 3 தேர்தல்களை நான் சந்தித்துள்ளேன். அதில் முக்கியமானது 2019 பாராளுமன்றத் தேர்தல். நெல்லித்தோப்பு சட்ட மன்ற தொகுதியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது 70 சதவீத வாக்குகளை அந்த தொகுதி மக்கள் அளித்து என்னை வெற்றி பெற வைத்தார்கள்.

அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளித்து எங்களது காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேபோல கூட்டணி கட்சியை சேர்ந்த வெங்கடேசன் தட்டாஞ்சாவடி சட்ட மன்ற தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். எங்கள் அணியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் இருந்தன. எதிர் அணியில் என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா ஆகியவை ஒருங்கிணைந்து தேர்தல் பிரசாரம் செய்தன. ஆனாலும் எங்கள் அணி வெற்றி பெற்றது.

இது புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. புதுச்சேரி மாநில மக்களுடைய ஆதரவோடும், ஒத்துழைப்போடும் இங்கு அமர்ந்து இருக்கின்ற அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் பேராதரவோடு தொடர்ந்து நாங்கள் மக்கள் நலத் திட்டங்களை புதுச்சேரி மாநிலத்தில் நிறைவேற்றி வருகிறோம்.

மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய நிதி கிடைக்கவில்லை. மற்றொரு புறம் மத்திய அரசின் நெருக்கடி, இன்னொரு புறம் கிரண்பேடியை துணை நிலை ஆளுநராக நியமித்தது புதுச்சேரி அரசுக்கு தொல்லை.

இன்னொரு புறம் மத்திய அரசின் ஆட்சி கவிழ்ப்பு வேலை. புதுச்சேரி மாநில மக்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருந்தாலும் 5 ஆண்டுகளை நிறைவு செய்த அரசு காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் இருப்பது 5 நாளோ, 10 நாளோதான்.

ஆனால் எதிர்க்கட்சிகள் தங்களது வேலையை பல ஆண்டு காலம் காட்டினார்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. இப்போது அஸ்திரத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். நான் எங்களுடைய ஆட்சியில் 4 ஆண்டு கால சாதனைகளை, செயல்பாடுகளை பத்திரிகைகளில் விளம்பரமாக கொடுத்தேன். இருந்தாலும் கூட புதுச்சேரி மாநில மக்களுக்கு அதை நிறைவேற்றும் விதமாக சிலவற்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடந்த ஆட்சி காலத்தில் விட்டுவிட்டு சென்ற திட்டங்கள், நிறைவேற்றாமல் சென்ற திட்டங்கள், அடிக்கல் நாட்டாமல் சென்ற திட்டங்கள் எல்லாவற்றையும் நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

புதுச்சேரியில் 4 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு 3 திறக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உப்பனாறு பாலம் 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது.

காரைக்கால் தொகுதியில் நீதிமன்ற வளாகம் நாங்கள் திறந்து இருக்கிறோம். கடற்கரை சாலையில் நீதிபதிகள் தங்கும் விடுதியை புனரமைத்து திறந்து இருக்கிறோம். புதுச்சேரி மாநிலத் தில் வரலாறு காணாத வகையில் 120 க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து இருக்கிறோம்.

கொரோனா காலத்தில் எங்கள் அரசின் பணிகள் பாராட்டுக்குரியது. உயிரை பணயம் வைத்து அமைச்சர்கள், காங்கிரஸ் - தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், செயல்பட்டதை புதுச்சேரி மாநில மக்கள் அறிவார்கள் என நீண்ட நேரம் உரை நிகழ்த்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கூக்குரலிட்டனர்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனையடுத்து பதவியை இராஜினாமா செய்த முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து இராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

அதன்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 'புதுச்சேரி அமைச்சரவையை இராஜினாமா செய்துள்ளோம். இனி முடிவு செய்ய வேண்டியது ஆளுநர்தான். நியமன சட்ட மன்ற உறுப்பினர்கள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தக்க தண்டனை கொடுப்பார்கள்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்குத்தான் வாக்களிக்க உரிமை உண்டு. நியமன சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. இந்த படுபாதக செயலை செய்த என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்' என்றார்.

இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து சித்து விளையாட்டுகள் விளையாடி ஆட்சிக்கு அரங்கேற்றி வரும் பாஜக மீது ஏனைய அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் அதன் உறுப்பினர்கள் பதவியை இராஜினாமா செய்தபோது அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சிகள், திமுகவை சேர்ந்த வெங்கடேசன் என்ற உறுப்பினர் இராஜினாமா செய்தபோது உண்மையில் பாஜகவின் அரசியல் விளையாட்டை இரசிக்கவே செய்தனர்.

விரைவில் தமிழகத்திலும் இத்தகைய நிகழ்வு நடைபெறலாம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment