(இராஜதுரை ஹஷான்)
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்போம் என பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாடுகளுடன் இலங்கை பொதுவான வெளிவிவகார கொள்கையினை பேணுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொரு வருடமும் பாரிய நெருக்கடிகளை ஏதாவதொரு வழிமுறையில் எதிர்கொள்கிறது. 2014 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கம் ஜெனிவா விவகாரத்தை சிறந்த முறையில் கையாண்டது.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை தொடர்பான ஜெனிவா விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டது. அரசியல் பழிவாங்களுக்கு இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. 2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதிகளில் இலங்கை சர்வதேச அரங்கில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது. இதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனம் பிரதான காரணியாக அமைந்தது.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட 30(1) பிரேரணைக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அரச தலைவருக்கும், பாராளுமன்றத்துக்கும் அறிவிக்காமல் இலங்கை அரசாங்கம் குறித்த பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்குவதாக இணக்கம் தெரிவித்தமை தேசதுரோக செயற்பாடாகவே கருத வேண்டும்.
நாட்டுக்கு எதிராக பிரேரணைகளில் இருந்து அரசாங்கம் வெளியேறும் என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்தார். இதன் பிரகாரமே கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கூட்டத் தொடரில் 30.1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகியது. இம்முறை இடம்பெறவுள்ள கூட்டத் தொடரில் இலங்கையினை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கையில் 16 விடயங்கள் நாட்டின் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவதாகவும், பொது சட்டத்திற்கு எதிரானதாகவும் காணப்பட்டது. இவ்விடயத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் இடம் பெறவுள்ளது. இம்முறை தீர்க்கமான தீர்மானங்கள் எடுக்கப்படும். பலம் வாய்ந்த நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும். அனைத்து நெருக்கடிகளுக்கும் இம்முறை தீர்வு காண முடியும் என்றார்.
No comments:
Post a Comment