வடக்கு மாகாணத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Sunday, February 21, 2021

வடக்கு மாகாணத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 442 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதிலலேயே ஆறு பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் எட்டுப் பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், ஒருவருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவருடைய வீட்டில் திருகோணமலையிலிருந்து வருகை தந்த உறவினர்கள் தங்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் திருகோணமலை திரும்பிய நிலையில் அங்கு அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, யாழில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைவிட, கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட ஆடைத் தொழிற்சாலையில் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் கொழும்பு சென்று திரும்பியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மல்லாவி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கரைச்சி ஆடைத் தொழிற்சாலையில் கண்டறியப்பட்ட பணியாளருடன் நேரடித் தொடர்புடையவர் என மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment