(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் அரச தரப்பிலிருந்து ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் நாட்டிற்கு எதிரானவர்களுக்கு வாய்ப்பளிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து வினவியபோதே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் அரச தரப்பிலிருந்து ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறவில்லை என்றும் சிலர் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
எனினும் நாமறிந்த வரையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த கேள்வியொன்றுக்கே பதிலளித்தார்.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனால் ஏற்படக் கூடிய அழுத்தம் மற்றும் சர்வதேச சமூகத்திலிருந்து எழுந்திருக்கும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் நோக்கிலும் பிரதமர் இவ்வாறு கூறியிருக்கலாம்.
எனினும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனின், ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நீக்கி புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டியது அவசியமாகும்.
ஆனால் இவ்விடயத்தில் அரசாங்கத்திற்குள்ளேயே ஒருவருக்கொருவர் முரணான கருத்துக்களை வெளியிடுவதென்பது, எமது நாட்டிற்கு எதிரான செயற்படும் அமைப்புக்களுக்கு வாய்ப்பளிப்பதாகவே அமையும் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment