(இராஜதுரை ஹஷான்)
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சாரம்சத்தை பொதுபலசேனா அமைப்பிற்கு வழங்க வேண்டும். அல்லது பொதுபலசேனா அமைப்பு குறித்து பிரதான நிலை ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தி குறித்து ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுபலசேனா அமைப்பின் ஊடக செயலாளர் ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் கடந்த 2019.04.21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுபலசேனா அமைப்பு மற்றும் ஞானசார தேரருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதான ஊடக சேவை தலைப்புச் செய்தியில் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதிக்கு மாத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கோ, ஏனைய தரப்பினருக்கோ இதுவரையில் வழங்கப்படவில்லை. எமது அமைப்பு குறித்து அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் விடயங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளமை பொதுபலசேனா அமைப்பிற்கு இழைக்கும் அநீதியாகவே கருத முடியும்.
பொதுபலசேனா அமைப்பு தொடர்பில் பிரதான ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தியை ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகவே குறித்த ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. இச்செய்தி மக்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்தினை தோற்றுவித்துள்ளது. இவ்விடயம் குறித்து எமது அமைப்பின் சார்பில் சாட்சியங்களை பெறுவது அவசியமாகும்.
2019.04.21 ஈஸ்டர் தினத்தில் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினர் கடந்த மதம் 31 ஆம் திகதி விசாரணை அறிக்கையினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.
No comments:
Post a Comment