பாகிஸ்தான் பிரதமரின் வருகைக்கு முன்னர் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானியை வெளியிடுங்கள் - எஸ்.எம்.மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

பாகிஸ்தான் பிரதமரின் வருகைக்கு முன்னர் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானியை வெளியிடுங்கள் - எஸ்.எம்.மரிக்கார்

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கொவிட் சடலங்கள் தொடர்பான விவகாரத்தை பயன்படுத்திக் கொள்ள அரசாங்கத்திற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியது, பாக்கிஸ்தான் பிரதமரின் வருகையை அடிப்படையாகக் கொண்டதில்லை என்றால் அதனை உடனடியாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டும் என்றும் மரிக்கார் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளுக்கு அப்பால் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை பலவந்தமாக தகனம் செய்வதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறது.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே நீரினால் கொவிட் தொற்று பரவாது என்று கூறியதை அடிப்படையாகக் கொண்டு, இனிமேலாவது சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுமா என்று பிரதமரிடம் கேட்ட போது அதற்கு அவர் ஆம் என்று பதலளித்தார். எனினும் சபாநாயகர் அது தற்போது கேட்க வேண்டிய விடயமல்ல என்று தடுக்க முற்பட்டார்.

மரிக்கார் கேட்ட கேள்விக்கு பதில், ஆம் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் கூறினார். ஆனால் தற்போது அதனை வேறு வகையில் திரிபுபடுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.

இதனை நான் காணொளி மற்றும் குரல் பதிவின் ஊடாக ஹன்சாட் திணைக்களத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளேன். அதில் கூறப்பட்டுள்ளதை யாராலும் மாற்ற முடியாது.

எமக்கு அரசியலை விட நாடு முக்கியமானதாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கிருக்கிறது. கடந்த முறையும் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவுடனேயே இலங்கை காப்பற்றப்பட்டது.

எனவே இம்முறையும் ஜெனிவாவில் தப்பித்துக் கொள்வதற்காக கொரோனா சடல விவகாரத்தை பயன்படுத்திக் கொள்ள இடமளிக்க முடியாது. பிரதமரின் கூற்றை நகைச்சுவையாக்க முற்பட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.

22 ஆம் திகதி பாக்கிஸ்தான் பிரதமரின் வருகை மையப்படுத்தி இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறெனில் இது பிரயோசனமற்றதாகும். இந்த விவாகரம் ஏற்கனவே சர்வதேசத்தின் கவனத்திற்குள் சென்றுள்ளது.

பிரதமரின் அறிவிப்பு பாகிஸ்தான் பிரதமரின் வருகையை மையப்படுத்தியது இல்லை என்றால் அவரது வருகைக்கு முன்னர் அதனை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment