(எம்.மனோசித்ரா)
வாடகைக்கு வழங்கிய கட்டடத்தை மீள கேட்டமையால் ஏற்பட்ட முரண்பாட்டில் , 22 வயது யுவதி உள்ளடங்கலாக 5 பேரால் திட்டமிட்டு குறித்த கட்டட உரிமையாளர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளாகவும் சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இம்மாதம் 8 ஆம் திகதி சீதுவ பொலிஸ் பிரிவில் ரத்தொலுவ - முத்துவாடிய பிரதேசத்தில் 26 வயதுடைய நபரொருவர் கடத்தப்பட்டுள்ளார். வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்த போதே குறித்த நபர் கடத்தப்பட்டுள்ளார்.
இவர் மக்கொன பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதோடு, கடத்தப்பட்டு இரு தினங்களின் பின்னர் அவரது சடலம் நிக்கவரெட்டிய - கொட்டவேற பொலிஸ் பிரிவில் கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பான விஷேட விசாரணைகள் சீதுவ மற்றும் கொட்டவேற பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டன. நீண்ட விசாரணையின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட குறித்த 26 வயதுடைய நபர் எராந்த பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவருக்கு மாத்தறை அநகாரிக தர்மபால மாவத்தையில் கட்டடமொன்று உள்ளதாகவும் அந்த கட்டடத்தை வாடகைக்கு பெற்றுக் கொண்டிருந்த நபரால் திட்டமிட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வாடகைக்கு வழங்கியிருந்த கட்டடத்தை மீள பெற்றுக் கொள்ள முயற்சித்த போது ஏற்பட்ட முரண்பாடுகளே கொலைக்கான காரணமாகும்.
கொலையுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார். இவர் மாத்தறை - ஹக்மனை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய யுவதியொருவராவார்.
குறித்த யுவதி முகப்புத்தகம் ஊடாக கொல்லப்பட்ட நபருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, ஹோட்டலொன்றில் தங்குவதற்காக சீதுவ பிரதேசத்திற்கு வருமாறு அவரை அழைத்துள்ளார்.
அதற்கமையவே குறித்த நபர் வேனொன்றில் அந்த பிரதேசத்திற்கு வந்துள்ளார். இதன் போதே அவர் கடத்தப்பட்டு, நிக்கவரெட்டிய - கொட்டவேற பிரதேசத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment