பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், அரச புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் ஆகியோரை எதிர்வரும் 05 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுதாரர்களுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டிலுள்ள பிரபல தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட போது, வௌிநாடுகளிலிருந்து 6000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைக்கே அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முழுமையாக விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிடுமாறு கோரி, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொராயா ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
கொழும்பு சின்னமன் கிரேண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவரின் தேவைக்கு அமைய, வர்த்தகர் ஒருவரால் குறித்த வாள்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 600 வாள்கள் குறித்து தகவல் கிடைத்ததாகவும் ஏனைய 5400 வாள்கள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைக்காமையால், அது குறித்து விசாரணை நடத்த பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment