நான் குர்ஆனை ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை இரண்டு தடவைகள் வாசித்தேன், அதில் மரணிப்பவர்களை புதைப்பது கட்டாயமென எந்தவொரு இடத்திலும் கூறவில்லை - அமைச்சர் உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Friday, January 8, 2021

நான் குர்ஆனை ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை இரண்டு தடவைகள் வாசித்தேன், அதில் மரணிப்பவர்களை புதைப்பது கட்டாயமென எந்தவொரு இடத்திலும் கூறவில்லை - அமைச்சர் உதய கம்மன்பில

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையில் எவரும் கொவிட்-19 வைரஸ் பரவலால் உயிரிழக்கக்கூடாது என நாம் முயற்சித்துக் கொண்டுள்ளோம், ஆனால் எதிர்க்கட்சியினர் மாறாக ஒருவர் இறந்தால் அவரை புதைப்பதா அல்லது எரிப்பதா என விவாதித்துக் கொண்டுள்ளனர் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

மரணிப்பவர்களை புதைப்பது குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ள போதிலும் அது கட்டாயமானது என எந்தவொரு இடத்திலும் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, நாட்டின் தற்போதைய கொவிட்-19 வைரஸ் பரவல் நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் பலவீனமான செயற்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தொற்று நோய் பரவல் இருப்பதாக சுகாதார பணிப்பாளர் மூலமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவரே சகல விடயங்களில் தீர்மானம் எடுத்தாக வேண்டும்.

இதில் இனம், மத பேதங்கள் இன்றி தீர்மானம் எடுக்க வேண்டும். இறப்பவர் ஒருவரை புதைக்க வேண்டாம் என்றோ அல்லது எரிக்க வேண்டாம் என்றோ கூறவில்லை. ஆனால் நாம் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் எனவும் நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தோம். 

ஆனால் இந்த விடயத்தில் தமது மத சம்ரதாயங்களுக்கு அமைய எரிப்பது இறை விருப்பத்திற்கு முரணானது, குர்ஆனில் குறிப்பிடப்படுவது புதைப்பது மட்டுமே என முஸ்லிம் அரசியல்வாதிகள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கருத்துக்களை கூறுகின்றனர்.

நான் இது குறித்து அறிந்துகொள்ள குர்ஆனை ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை இரண்டு தடவைகள் வாசித்தேன். இதில் ஐந்தாவது அத்தியாயத்தில் நல்லதொரு விடயம் குறிப்பிடப்படுகின்றது.

ஆதமின் புதல்வர்கள் இருவருக்கு இடையில் இடம்பெறும் மோதலில் ஒரு மகன் இறக்கின்றார். குர்ஆனுக்கு அமைய உலகின் முதலாவது மரணம் இதுவாகும், எனவே இந்த உடலை என்ன செய்வது என்ற கேள்வி எழுகின்றது.

இதில் 31 ஆம் அத்தியாயத்தில் கூறப்படுகின்றது என்னவென்றால், இறைவன் பறவை ஒன்றை அனுப்புகின்றார், அந்த பறவை நிலத்தை கொத்தி குழி பறிக்கின்றது, ஏனென்றால் இந்த உடலை மண்ணினால் புதைக்க வேண்டும் என்பதற்காக என கூறப்படுகின்றது. இந்த இடத்தில்தான் உடல் நல்லடக்கம் குறித்து சுட்டிக்காட்டப்படுகின்றது. 

ஆனால் குர்ஆனை நான் படித்துப் பார்த்ததில் கவனித்த ஒன்று என்னவென்றால், கண்டிப்பாக உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றோ அல்லது உடலை எரிப்பது மார்க்கத்திற்கு முரணானது என்றோ குர்ஆனில் எங்கேயும் சுட்டிக்காட்டப்படவில்லை.

முஸ்லிம்களின் ஏனைய நடவடிக்கைகளில் நன்மை தீமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் உடலை அடக்கம் செய்வது விடயத்தில் அவ்வாறு எதுவுமே செய்யப்படவில்லை. 

எனவே மத வழிபாடுகள் சம்ரதாயங்கள் என்று எடுத்துக் கொண்டால் அணைத்து மதங்களிலும் அவ்வாறான சம்ரதாயங்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டு சுகாதார வழிமுறைகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டும்.

No comments:

Post a Comment