போராடுவது என்றால் தனக்கு கரும்பு திண்பது போல அதை யாரும் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் ஹரீஸ் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

போராடுவது என்றால் தனக்கு கரும்பு திண்பது போல அதை யாரும் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் ஹரீஸ் எம்.பி

(சர்ஜுன் லாபீர்)

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் பொருட்டும் மற்றும் முஸ்லிம்களின் ஏனைய பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை பெறுவதென்ற நல்நோக்கின் அடிப்படையில் அரசாங்கத்தின் உத்தரவாதத்தின் பிரகாரம் 20 க்கு நாங்கள் ஆதரவு வழங்கினோம் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை சம்மந்தமாகவும், கல்முனையில் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட விடயம் சம்மந்தமாகவும் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (2) பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் கல்முனை காரியலயத்தில் நடைபெற்றது.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தொடர்ந்தும் கருத்து தெரிவிகையில் ஆனால் அரசாங்கம் எங்களிடம் வழங்கிய வாக்குறுதிகள் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டே வருகின்றது. எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அழுத்தத்தை அரசிடம் பல வடிவங்களில் கொண்டு சென்றோம்.

ஒவ்வொரு கட்டங்களிலும் மிகவும் அவதானத்துடன் எமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதான காரணங்களாக இனவாத சக்திகள் எமக்கெதிராக அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என்பதாகும்.

பெரும்பான்மை சமூகத்தினால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்திடம் நமது உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? என்பது தொடர்பான உணர்ச்சிகளைத் தாண்டிய அறிவியல் ரீதியான அனுகுமுறைகள் அவசியம்.

எமக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி அசிங்கமான பிரச்சாரங்களை சிலர் அரங்கேற்றி வருகின்றனர். நாங்கள் பணங்களை பெற்றதாகவும், பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் 20 ற்கு ஆதரவு தெரிவித்தோம் என்று பல பொய்யான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். சமூகத்தை காட்டிக் கொடுத்து இவைகளை பெற்றுக் கொள்வதற்கான எந்த தேவையும் எமக்கு இல்லை. 

கடந்த நல்லாட்சியில் நமது சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட பிரச்சினைகளுக்காக அமைச்சுப் பதவிகளை தூக்கியெரிந்த வரலாறுகள் உங்கள் கண்முன் உள்ளது. 

நாங்கள் எவ்வாறு எங்கெல்லாம் சென்று நமது சமூகத்தின் உரிமைகளுக்காக போராடினோம் என்பது தொடர்பாக வெளிப்படையாக பேசி அரசியல் இலாபம் தேட முனையவில்லை. எமது சமூகத்திற்கான உரிமைகள் விடயத்தில் போராடுவது என்றால் தனக்கு கரும்பு திண்பது போல அதை யாரும் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் துறை சார்ந்த நிபுணர்கள், பெளத்த பீடங்களின் பீடாதிபதிகள், வெளிநாட்டு தூதுவராலயங்கள் என்று பலதரப்பட்ட சந்திப்புக்களையும் கூட்டங்களையும் நடாத்தியுள்ளோம். எங்களது இவ்வாறான முயற்சிகள்தான் நிபுணத்துவ குழுவை நிறுவுவதற்கு முனைந்து இருக்கின்றது.
இறுதியாக இரண்டு மூன்று நாட்களுக்கு பிற்பாடு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜாபக்ஸவோடு ஒரு சந்திப்பை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அச்சந்திப்பில் எமக்கான சாதகமான முடிவுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment