ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 13, 2021

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் விடுதலை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் சுமார் 5 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து கடந்த நவம்பர் 24ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். 

இவ்வழக்கில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோரே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு நேற்றுமுன்தினம் (11) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி இந்த வழக்கில் தொடர்ந்து சாட்சிகளை முற்படுத்தி நெறிப்படுத்த தேவையில்லை எனவும் இவ்வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க சட்ட மாஅதிபர் திணைக்களம் எதிர்பார்க்க வில்லையெனவும் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து இதனை பரிசீலனை செய்த நீதிமன்றம் இன்று (13) இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி அறிவித்திருந்தார்

இதற்கமைய குறித்த பிரதிவாதிகள் ஐவருக்கும் எதிரான வழக்கு? மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சூசைசதாசனினால் இன்று (13) தள்ளுபடி செய்யப்பட்டு, குறித்த ஐவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி நள்ளிரவு ஆராதனையின்போது மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(ரீ. எல். ஜவ்பர்கான்)

No comments:

Post a Comment