கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய வருடாந்த இடமாற்றங்கள் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய வருடாந்த இடமாற்றங்கள் இடைநிறுத்தம்

2021ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றக் கட்டளைக்கமைய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் கொவிட்-19 தொற்று அபாயத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்வதற்காகவும், நேரத்திற்கு நேரம் மாகாணத்தின் பல பகுதிகள் முடக்கப்படுவதன் காரணமாகவும், இணைந்த சேவைக்கான வருடாந்த இடமாற்றங்களை செயற்படுத்துவதற்கு தடைகள் ஏற்பட்டுள்ளதால் மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய எதிர்வரும் 18ம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படவுள்ள வருடாந்த இடமாற்றங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

2020 வருடாந்த இடமாற்றக் கட்டளைக்கமைய இதுவரை நிறுவனங்களிலிருந்து விடுவிக்கப்படாதவர்களின் இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்விடமாற்றங்கள் மீளவும் செயற்படுத்தும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சகல செயலாளர்களுக்கும், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு சுற்று நிரூபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள், படவினைஞர் உத்தியோகத்தர்கள், சாரதிகள் ஆகியோருக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ஒலுவில், நற்பிட்டிமுனை விசேட நிருபர்கள்)

No comments:

Post a Comment