நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நாட்டிலேயே மிகப்பெரிய பூங்காவை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் கோடிக்கு இம்ரான் கான் அரசு அடமானம் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டதால், அந்நாட்டின் அந்நிய செலவாணியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்டில், சவுதி அரேபியா 3 பில்லியன் டொலர் மென்மையான கடனை முன்கூட்டியே திருப்பித் தருமாறு பாக்கிஸ்தானைக் கேட்டுக் கொண்டது.
இஸ்லாமாபாத் அதன் தற்போதைய இராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை அனுப்பி பதற்றங்களைத் தணிக்க முயன்றது. இருப்பினும், சவூதி அரேபியா தனது கோரிக்கையிலிருந்து மீளவில்லையென தெரியவந்துள்ளது.
கொரோனா பேரிடரால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித்தவித்து வருகிறது. சவுதி அரேபியாவிடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன், ஐக்கிய அரபு இராச்சியத்திடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகிறது.
எனினும், சீன அரசு அவ்வப்போது நிதியுதவி அளித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது. தற்போது கடன் செலுத்தும் தொகை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றைச் சமாளிக்க பாகிஸ்தானில் இருக்கும் மிகப்பெரிய பூங்கா ஒன்றை இம்ரான் கான் அரசு அடமானம் வைக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஃபாத்திமா ஜின்னாவின் (முகமது அலி ஜின்னாவின் தங்கை) நினைவாக இஸ்லாமாபாத்தில் உருவாக்கப்பட்ட எஃப்-9 பூங்கா சுமார் 759 ஏக்கர் பரப்பளவில் கொண்டது. இப்பூங்கா நாட்டிலேயே அதிக பசுமையான பகுதிகளைச் சூழ்ந்திருக்கும் மிகப்பெரிய பூங்கா.
இப்பூங்காவை அடமானம் வைப்பதற்கான ஒப்புதலை வழங்க பிரதமர் தலைமையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது.
அடமானம் வைக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதால், சாத்திரமாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்நாட்டின் தலைநகர் (இஸ்லாமாபாத்) மேம்பாட்டு ஆணையம் ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை முன்கூட்டியே வழங்கிவிட்டது. நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு இறுதிசெய்யப்படும்.
பாகிஸ்தான் அரசு இதுபோன்று நாட்டின் உடமைகளை அடகு வைப்பது முதல் முறையல்ல என்று கூறப்படுகிறது. இதற்கு முந்தைய அரசுகள் சாலைகள், கட்டடங்கள், நிறுவனங்களை அடகு வைத்து கடன் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
எஃப்-9 பூங்காவை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் கோடிக்கு (இந்திய மதிப்பில் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய்) அடமானம் வைக்கப் போவதாகக் கூறப்பட்டுள்ளது. முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
No comments:
Post a Comment