(எம்.ஆர்.எம்.வசீம்)
ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு மற்றும் அதனை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிப்பதற்காக கொழும்பு நாரஹேன்பிடி தொழிலாளர் செயலகத்துக்கு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட் தொற்று நிலைமை பரவும் நிலைமையுடன் பொதுமக்கள் பாரியளவில் கொழும்பு பிரதான காரியாலயத்துக்கு வருவதை தவிர்க்கும் நோக்கில் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் நாடு பூராகவும் அமைக்கப்பட்டிருக்கும் மாவட்ட மற்றும் வலய தொழிலாளர் காரியாலயங்களுக்கு பகிந்தளிக்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன் மாவட்ட வலய தொழிலாளர் காரியாலயங்களில் பெற்றுக் கொடுக்கப்படும் ஊழியர் சேமலாப நிதிய நன்மைகளை பெற்றுக் கொள்ளும் விண்ணப்பப்படிவங்கள், அந்த காரியாலயங்கள் ஊடாகவே நேரடியாக இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்க தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அதனால் தமது விண்ணப்பங்களை மாவட்ட அல்லது வலய காரியாலயங்களுக்கு வழங்குவதன் மூலம் நிதி பெற்றுக் கொள்வதில் எந்தவித காலதாமதமும் ஏற்படாது. அவ்வாறான காலதாமதம் ஏற்படும் என்ற சந்தேகம் அல்லது பீதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
அத்துடன் கொழும்பு பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ஒருவரின் ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக் கொள்ளும் போது தற்போது, அந்த நிறுவனம் மூடி இருந்தால், அந்த நபர் மாத்திரம் தமது விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிப்பதற்காக தொழில் திணைக்களத்தின் கொழும்பு தொழிலாளர் பொதுச் செயலாளர் காரியாலயத்துக்கு வர வேண்டும்.
No comments:
Post a Comment