கண்டி - பூவெலிகட சங்கராஜ மாவத்தையில் ஐந்து மாடி கட்டடத்தின் கட்டுமாணப் பணிகளில் இருந்த குறைபாடுகள், தரமற்ற பொருட்களை பயன்படுத்தியமை போன்ற காரணங்களே கட்டிடம் இடிந்து வீழ்ந்தமைக்கான காரணமென பத்து பேர் கொண்ட பொறியியலாளர்களின் விசாரணைக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் புவிச் சரிதவியல் ரீதியிலோ நிலத் தோற்றத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் காரணமாகவோ இயற்கை அனர்த்தம் காரணமாகவோ கட்டிட சரிவு ஏற்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி பூவெலிகட சங்கராஜ மாவத்தையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளர் முன்னாள் நாத்த தேவாலய பஸநாயக்க நிலமே அனுர லெவுகே கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இது தொடர்பில் ஆராய்வதற்கு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரனி லலித் யூ கமகே பத்து பேர் கொண்ட பொறியியலாளர்கள் குழு ஒன்றினை அமைத்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தார்.
அதற்கமைய பத்து பேர் கொண்ட பொறியியலாளர்கள் குழு தற்போது அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இவ்அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டணை பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
(கண்டி நிருபர்)
No comments:
Post a Comment