(எம்.எப்.எம்.பஸீர்)
சுமார் ஒன்பது மாதங்களாக சி.ஐ.டி. தடுப்பில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை மேலும் மூன்று மாதங்களுக்கு தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேவுக்கு அறிவித்துள்ளது.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான ஆவணங்களில் பாதுகாப்பு அமைச்சர் கையெழுத்திட்டுள்ளதாகவும் இதன்போது சி.ஐ.டி.யினர் மன்றுக்கு மேலதிக விசாரணை அறிக்கையை கையளித்து தெரிவித்தனர்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர்கள் கூறினர்.
தற்போது ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கொவிட்19 தொற்று காரணமாக களுத்துறை பொலிஸ் கல்லூரியில் சிகிச்சை பெறுவதாகவும் சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்றுவரை தடுப்பக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரைக் கைது செய்யும் சந்தர்ப்பத்தில் எதுவித காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்று அவரது சட்டத்தரணிகள் மனு மீதான விசாரணயின் போது தெரிவித்திருந்தனர்.
No comments:
Post a Comment