சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களின் தண்டனை காலம் பெப்ரவரி மாதம் நிறைவடைகிறது. சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை குறித்து கேட்ட கேள்விக்கு, அபராதத்தை செலுத்தினால் சசிகலா ஜனவரி 27 ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என்று பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக பதில் கூறியது.
நன்னடத்தை அடிப்படையில் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தாலும் கூட, அவர் விடுதலை ஆகும் திகதி ஜனவரி 27 என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று சிறை நிர்வாகம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது.
இளவரசியும் தனக்கான அபராதத்தை செலுத்திவிட்டார். ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களை கழித்து விட்டு பார்க்கும்போது, சுதாகரனின் தண்டனை காலம் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து சுதாகரனை, அபராதம் செலுத்தியவுடன் விடுதலை செய்யுமாறு பெங்களூரு தனிக் கோர்ட்டு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால் சுதாகரன் தரப்பினர் இதுவரை ரூபா. 10 கோடி அபராதத்தை செலுத்தவில்லை. இது குறித்து அவரது வக்கீலை தொடர்புகொண்டு கேட்டால், சுதாகரனுக்கான அபராதத்தை விரைவில் செலுத்துவோம் என்று கூறுகிறார்.
ஆனால் இதுவரை அவரது வக்கீல்கள் பெங்களூரு வரவில்லை. சுதாகரன் தரப்பினர் அபராதம் செலுத்துவதை தாமதித்து வருவதாக கூறப்படுகிறது.
சிறையில் இருந்து விடுதலை ஆனாலும் சசிகலா மீது ஊழல் தடுப்பு படையில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அதாவது சிறையில் சொகுசு வசதிகளை பெற அவர் சிறைத்துறை உயர் அதிகாரிக்கு ரூபா. 2 கோடி இலஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அது இன்னும் விசாரணை கட்டத்தில்தான் உள்ளது. சசிகலா விடுதலையாகி தமிழகம் சென்றாலும், இந்த வழக்கில் விசாரணைக்காக அவர் கர்நாடகத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment