வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த் தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார்.
அண்மையில் வவுனியாவில் பெய்த கன மழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்த் தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி வருகின்றது.
இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்த் தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமுள்ளனர்.
இந்நிலையில் நீர்த் தேக்கத்தினை பார்வையிடுவதற்காக குறித்த மாணவன் தனது நண்பர்களுடன் நேற்றையதினம் மதியம் அங்கு சென்றுள்ளார்.
இதன்போது நீர் வழிந்தோடும் வாய்க்கால் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீரினுள் இறங்கி மாணவனை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிசார் மற்றும் பிரதேச வாசிகளால் மாணவனை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment