(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
மஹர சிரைச்சாலை கலவரம் இடம்பெற்று ஒரு வார காலம் கடந்தும் மரணித்தவர்களில் 4 பேர் மாத்திரமே இதுவரை இனம் காணப்பட்டிருக்கின்றனர். அதனால் இந்த சம்பவத்தின் பின்னால் பாரிய சதித்திட்டம் இருக்க வேண்டும். அத்துடன் மரணித்தவர்களின் பிரேத பரிசோதனையை நடத்தாமல் எரித்து விடவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுற்றாடல், வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மஹர சிறைச்சாலை கலவரத்தில் 11 பேர் மரணித்துள்ளனர். அவர்களில் 4 பேரின் சடலங்களே இதுவரை இனம் காணப்பட்டிருக்கின்றன. இலங்கை பொலிஸாருக்கு இதனை கண்டுபிடிக்க 24 மணி நேரம் போதும். அதனால் இந்த விடயத்துக்கு பின்னால் பாரிய சதித்திட்டம் இருக்கும் என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது. மரணித்தவர்களை பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் அவர்களை எரித்து விடவே முயற்சிக்கின்றனர்.
அத்துடன் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் உறவினர்கள், அவர்களின் பிள்ளைகள், கனவர் தொடர்பில் இன்னும் முறையான தகவல் தெரியாமல் சிறைச்சாலைக்கு முன்னால் அழுதுகொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு உண்மையான தகவல்களை தெரிவிக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கின்றது. அரசாங்கத்தின் இயலாமையை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
அதேபோன்று அரசாங்கத்தின் சதித்திட்டங்கள் மற்றும் கொலை காலாசம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதற்கு மஹர சிறைச்சாலை கலவரம் சிறந்த சாட்சியமாகும். அதனால் எமது நாடு மீண்டும் கடந்த கால கொலைகார கலாசாரத்துக்கா செல்கின்றது என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
சர்வதேச நாடுகளும் மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றன. சிறையில் இருக்கும் கைதிகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அந்த பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகி இருக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment