எமது கடலிலுள்ள மீனை வேறு நாடுகள் எடுத்துச் செல்கின்றன, இதனை தடுப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

எமது கடலிலுள்ள மீனை வேறு நாடுகள் எடுத்துச் செல்கின்றன, இதனை தடுப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

இந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கும் எண்ணம் நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாவதற்கு முன்பிருந்தே இருந்தது. எனது தேர்தல் வரலாற்றில் முதலாவது கலந்துரையாடல் ரகவயிலிருந்தே ஆரம்பமானது. ரகவயில் வைத்து கலந்துரையாடியே முதன் முதலாக அரசியல் நடவடிக்கைகளுக்காக பயணித்தோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ரகவ நங்கூரமிடும் தளம் கட்டுமானப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (2020.12.06) ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கும் எண்ணம் நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாவதற்கு முன்பிருந்தே இருந்தது. எனது தேர்தல் வரலாற்றில் முதலாவது கலந்துரையாடல் ரகவயிலிருந்தே ஆரம்பமானது. ரகவயில் வைத்து கலந்துரையாடியே முதன் முதலாக அரசியல் நடவடிக்கைகளுக்காக பயணித்தோம்.

எந்த கட்சியிலிருந்து வந்தாலும், ஆட்சி புரிந்தாலும் அனைத்து அரசியல் தலைவர்களதும் மனதில் இருந்தது, அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் இந்த மீனவ துறைமுகத்தை அமைக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் அதனை செயற்படுத்த எமக்கே முடிந்தது. 

யார் என்ன சொன்னாலும் நாடு முழுவதும் இன்றளவில் 22 துறைமுகங்கள் காணப்படுகின்றன. நாம் கடற்றொழிலை அபிவிருத்தி செய்தோம். அது தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். மீனவ சமுதாயத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய அன்றிலிருந்தே நாம் நடவடிக்கை மேற்கொண்டோம். 

நாட்டை சுற்றி கடல் உள்ளது. ஆனால் வெளிநாட்டிலிருந்து மீன் இறக்குமதி செய்கிறோம். எமது கடலிலுள்ள மீனை வேறு நாடுகள் எடுத்துச் செல்கின்றன. இதனை தடுப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுப்போம். 

நாம் நமது கடல் வளத்தை பாதுகாத்து கடற்றொழில் துறையை மேலும் அபிவிருத்தி செய்து மக்களுக்கு தேவையான மீனை விநியோகிப்பது மாத்திரமின்றி, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்க முடியும். இத்துறையை அபிவிருத்தி செய்தல் மாகாணத்தை அபிவிருத்தி செய்தல் என்பவற்றை எமது பொறுப்பாக உணர்ந்து செயற்படுவோம். 

இந்த அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் கடற்றொழில் துறை மாத்திரமன்றி அனைத்து துறைகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தோம். இவை அனைத்து தொடர்பிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார். அதனால் நாம் அமைச்சர்கள் என்ற ரீதியில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

உங்கள் அனைவருக்கும் தெரியும் உங்களது இராஜாங்க அமைச்சர் நாம் எதிர்பார்க்கும் எமது செயற்படுத்தப்படவுள்ள கொள்கை தொடர்பில் உங்களுக்கு அறிவிப்பொன்றை விடுத்தார். 

நாம் நிச்சயமாக கடற்றொழில் முறையை அபிவிருத்தி செய்ய, கடற்றொழில் நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு, மீனவர்களின் வீடமைப்பு திட்டத்தை செயற்படுத்துவோம். 

முன்பு தென்னை ஓலையினால் வேயப்பட்ட குடிசைகளிலேயே மீனவர்கள் வாழ்ந்தனர். அவற்றை அகற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அதற்கமைய நாம் ஓடு கட்டப்பட்ட கூரைகளை வழங்க உறுதியளித்தோம். 

மீனவ சமுதாயத்தினருக்கு மாடி வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்தோம். மொரட்டுவ, அம்பலன்கொட, வெலிகம, சீனிமோதர, மாடி வீட்டுத் திட்டங்களை ஆரம்பித்து நாம் வீடுகளை பெற்றுக் கொடுத்தோம். 

முன்னர் வலைகளை எங்கு வைத்துக் கொள்வது என்ற பிரச்சினை ஏற்பட்டது. 30 ஆண்டு கால போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் தேவை குறித்து எண்ணி டக்ளஸ் தேவானந்தா அவர்களையும், தெற்கை கண்காணிக்க கஞ்சன விஜேசேகர அவர்களையும் நியமித்தோம் எனத் தெரிவித்தார்.

களமெடிய மீன்பிடி துறைமுகத்தில் தீயினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடாக, களமெடிய மீனவர்கள் 26 பேருக்கு, தலா ஒரு மீனவருக்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி கப்பல் மற்றும் மீன்பிடி கியர் என்பன பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டது.

ரகவ துறைமுகத்தை அண்மித்த பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதுடன், நங்கூரமிடும் தளத்தில் 300 மீட்டர் நீளமான 'தியகடனய', 74 மீட்டர் நீளமான 'வெலிகடனய' மற்றும் கப்பல் போக்குவரத்தை இலகுவாக்கும் நோக்கில் உள்நுழையும் கால்வாயொன்றும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற எஞ்சின்களை கொண்ட 350 ஃபைபர் படகு வசதிகளையும், கப்பல்களுக்கு பாதுகாப்பான கப்பல் அணுகலையும் வழங்குவதன் மூலம் மீனவர் மற்றும் மீனவ குடும்பங்களுக்கு பாதுகாப்பான தொழில்முறை மட்டத்தை இது வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரகவ மீன்பிடி நங்கூரத்தை நிர்மாணிப்பதன் மூலம் 1500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தப்படுவதுடன், சுமார் 70 பல நாள் கப்பல்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும்.ஓராண்டு என்ற குறுகிய காலப்பகுதிக்குள் இதன் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 379.53 மில்லியன் ரூபாயாகும்.

குறித்த சந்தர்ப்பத்தில், அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர்களான டீ.வீ.சானக, கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கலப்பத்தி, திலிப் வெதஆராச்சி, அஜித் ராஜபக்ஷ, தென் மாகாண சபை தலைவர் சோமவங்ச கோதாகொட, தென் மாகாண சபையின் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டீ.வீ.உபுல், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஐ.ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த சந்திரசோம உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment