ஊடகங்களுக்கு பாராளுமன்ற கதவுகள் அடைக்கப்பட்டமை தவறாகும், வரவு செலவு திட்ட தரவுகள் பல தவறானவை - ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

ஊடகங்களுக்கு பாராளுமன்ற கதவுகள் அடைக்கப்பட்டமை தவறாகும், வரவு செலவு திட்ட தரவுகள் பல தவறானவை - ரணில் விக்கிரமசிங்க

(எம்.மனோசித்ரா) 

வரவு செலவு திட்ட தரவுகள் பல தவறானவையாகும். போலி தரவுகளுடன் செயற்பட்டால் பணவீக்கமே ஏற்பட்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும். மக்களிடம் பணமில்லாத நிலையில் வரி சலுகைகள் வழங்கி என்ன பயன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். 

கொரோனாவை காரணம் காட்டி ஊடகங்களுக்கு பாராளுமன்ற கதவுகள் அடைக்கப்பட்டமை ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு சுபயோகமாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சி உறுப்பினர்கள் இன்று சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 2021 ஆம் நிதி ஆண்டிற்காக ஆளும் கட்சி சமர்பித்துள்ள வரவு செலவு திட்ட தரவுகள் பல தவறானவையாகும். நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகம் மறை எண்ணில் இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்திருந்தது. 

ஆனால் வரவு செலவு திட்ட அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி நிலையில் உள்ளதாக தரவுகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு போலி தரவுகளுடன் செயற்பட்டால் பண வீக்கமே ஏற்படும்.

அதன் பின்னர் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும். வரிச் சலுகைகள் வழங்கினாலும் கொள்வனவு செய்ய மக்களிடம் பணம் இருக்க வேண்டும்.

மக்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் வகையில் ஆளும் கட்சியின் வரவு செலவு திட்டம் அமையவில்லை என்பது கவலைக்குறிய விடயமாகும். 

எனவே மக்களை தெளிவுப்படுத்த வேண்டும். குறைகளை ஆதாரத்துடன் ஒப்புவிக்க ஐக்கிய தேசிய கட்சி செயற்பட வேண்டும். இந்த விடயத்தில் பிரதித் தலைவர் என்ற வகையில் ருவண் விஜேவர்தணவிற்கு பாரிய பொறுப்புள்ளது.

ஜனநாயகத்தின் முக்கிய தூணாக ஊடகம் உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் பாராளுமன்றமே ஊடகத்தை ஓரங்கட்டுவது என்பது ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு சுபயோகமாக அமையாது.

ஊடகங்கள் என்னை படுமோசமான முறையில் விமர்சித்தது. ஆனால் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் மும்முரமாக செயற்பட்டேன். கொரோனாவை காரணம் காட்டி ஊடகங்களுக்கு பாராளுமன்ற கதவுகள் அடைக்கப்பட்டமை தவறாகும். எதிர்க்கட்சி இதனை பேசுவதில்லை என்றார்.

No comments:

Post a Comment