(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இன்று நாட்டின் பொருளாதார வீழ்ச்சி கண்டுள்ள போதிலும் அடுத்த ஆண்டில் நாடாக மீட்சி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவிக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இன்று பொருளாதார நெருக்கடிகளை நாம் எதிர்கொள்ள முன்னைய ஆட்சியாளர்கள் காரணம் எனவும் குற்றம் சுமத்தினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கடனுக்கான வட்டியாக மட்டும் 1430 பில்லியன் ரூபாய்களை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆட்சியில் ரூபாவின் விலை குறைவடைந்ததனால் 1772 பில்லியன் ரூபாய்கள் மேலதிக கடனாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு வெறுமனே கொவிட் வைரஸ் மாத்திரம் காரணம் எனக் கூறிவிட முடியாது. இதற்கு முன்னர் ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகள், நாசகார வேலைகளும் காரணமாகும்.
எனினும் நாம் நெருக்கடிகளை கையாளும் ஆற்றல் கொண்டுள்ளோம். உலகில் உள்ள சகல முதலீட்டாளர்களையும் நாம் இலங்கைக்கு அழைக்கிறோம், நாம் தனித்தனியாக சகலருக்கும் அழைப்பு விடுத்தது வருகின்றோம்.
எனினும் எதிர்க்கட்சியினர் இலங்கை குறித்த தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என்பதையும் முதலீட்டாளர்கள் எமக்கு கூறுகின்றனர்.
எமது கடன் தேசிய மற்றும் சர்வதேச கடன்களாக கையாளப்படுகின்றது. எனினும் நாம் 70 வீதமாக கட்டுப்படுத்தியிருந்த கடன் வீதத்தை, கடந்த நல்லாட்சி அரசாங்கம் 2019 இல் 87 வீதமாக உயர்த்தியிருந்தனர். இன்று நாடு நெருக்கடியில் உள்ள போதிலும் இந்த சவால்களை எதிர்கொண்டு நாட்டினை கடன் நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கடனுக்கான வட்டியாக மட்டும் 1430 பில்லியன் ரூபாய்களை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொகையையும் கடனாகவே பெறவேண்டிய நிலைமை காணப்பட்டது. அதுமட்டும் அல்ல, கடந்த ஆட்சியில் ரூபாவின் விலை குறைவடைந்தது. இதனால் கடன்தொகை மேலும் 1772 பில்லியன் ரூபாய்கள் அதிகரித்தது. இந்த கடன்களையும் அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டியுள்ளது.
வரிகளில் மாத்திரம் நாட்டினை மீட்டெடுக்க முடியும் என நினைக்க வேண்டாம், பொருளாதார முகாமைத்துவம் தெரிந்திருக்க வேண்டும். எனவே இதனை இனியாவது எதிர்கட்சியினர் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளின் பின்னர் நீங்கள் ஆட்சியை பிடித்தால் அப்போதாவது நேர்த்தியாக இவற்றை கையாள கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன் என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment