கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது இரண்டரை வயது மகனுடன் தப்பியோடிய பெண்ணைத் தேட மூன்று சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எஹலியகொடை பகுதியைச் சேர்ந்த தாயும் இரண்டரை வயது மகனும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
நேற்றிரவு 09 மணியளவில் குறித்த பெண் தனது மகனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதையடுத்து அவர்களை தேடும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
குறித்த பெண், தனது மகனுடன் பஸ்சில் தனது ஊருக்குச் சென்றுள்ளதுடன், அங்குள்ள உறவினர் ஒருவருன் வீட்டில் அவரது மகனை ஒப்படைத்து விட்டு அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.
பொலிஸாரின் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளுக்கமைய இன்று காலை குறித்த பெண்ணின் மகனை எஹலியகொடை, யாபா வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து அடையாளம் கண்ட பொலிஸார், அவரை மீண்டும் சிகிச்சைக்காக அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பிள்ளை இருந்த வீட்டாரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
எனினும் சிறுவனின் தாய் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனையடுத்து இவரை தேடும் பணியில் விசேட பொலிஸ் குழுக்கள் மூன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
போதைப் பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது கொரோனா தொற்று காரணமாக தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment