முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் லோ. ஜூட் நிக்சன் மற்றும் கணக்களார் அ. சண்முகலிங்கம் ஆகியோர் நேற்று (10) மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கடற்பரப்பிலிருந்து, மாத்தளன், கொக்கிளாய் ஆகிய கடற்பரப்புகளில் இந்திய இழுவைப் படகுகள், இழுவை மடிகளைப் பயன்படுத்தி எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கான மீன்களை அழித்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் மீன் குஞ்சுகள், மீன் முட்டைகள் என்பவற்றினையும் அழித்து வருகின்றனர்.
எனவே, இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை தடுத்து எமது மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதுடன், எமது கடல்வளத்தினைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(விஜயரத்தினம் சரவணன்)
No comments:
Post a Comment