வெளிநாடுகளில் இருந்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர் - அமைச்சர் தினேஷ் குணவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

வெளிநாடுகளில் இருந்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர் - அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

மத்திய கிழக்கைச் சேர்ந்த 17 ஆயிரத்து 861 பேர் அடங்கலாக, 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ; குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்விற்கான வலைப்பின்னலை இலங்கையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான 'சுபீட்சத்தின் தொலைநோக்கு' வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களினதும், குடும்பத்தவர்களினதும் நலன்களை மேம்படுத்த திடசங்கற்பம் பூண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கொவிட்-19 தொற்றுநோய்ப் பரம்பலை அடுத்து, இவர்களின் நலன்களை உறுதிப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய அமைப்பில், தொழில் இழப்பு மற்றும் வருமானக் குறைப்பு போன்றன உள்ளடங்கலான அதிகளவிலான சவால்களை எமது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். 

மேலும், 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், 2020 இன் முதல் அரையாண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிச்செல்லும் பயணம் 57.2 வீதமாக குறைந்துள்ளதனை அவதானித்துள்ளோம்.

இதற்கு முன்னர் ஆண்டுதோறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை தேடிய சுமார் 200,000 இலங்கையர்களுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அளவிலான குறை எண்ணிக்கையாகும்.

கடந்த இரண்டு தசாப்தங்களில் புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஆண்டுக்கு சுமார் 200,000 பேர் வெளியேறும் விகிதத்துடன் சுமார் 1.5 மில்லியன் புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் பணி புரிவதாக தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த வெளிநாடுகளிலுள்ள இலங்கைகளில் சுமார் 800,000 பேர் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பணி புரிகின்றார்கள்.

1985 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நிறுவப்பட்டது முதல், இலங்கை பல ஆண்டுகளாக ஒரு நல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிர்வாக முறைமையை உருவாக்கியுள்ளது. நிர்வாக மற்றும் சட்ட விதிமுறைகள், சட்டங்கள் மற்றும் சேவைகள் இருந்தபோதிலும், இலங்கை இந்தத் துறையில் தொடர்ந்தும் பல சவால்களை எதிர்கொள்கின்றது. 

பாதுகாப்பு, குறைந்த ஊதியம் மற்றும் அதிக சார்புடைய குறுகிய இடங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய சிக்கல்களுடன் பெண் தொழிலாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் குறைந்த திறமையான பிரிவுகளில் தொழிலாளர் இடம்பெயர்வின் செறிவான விகிதமானது இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோயின் முதல் அலையின் போது, இந்த தொழிலாளர்களின் உடனடித் தேவைகள் குறித்த அனுபவ ரீதியான தரவுகளை சேகரிப்பதற்கும், வழிகாட்டுவதற்கும், தகவல்களை வழங்குவதற்கும், அவசரநிலைகளின் போது உதவுவதற்குமாக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்புத் தரவுத்தளம் நிறுவப்பட்டது. 

மத்திய கிழக்கு, தெற்கு ஐரோப்பா மற்றும் தூர கிழக்கு, மலேசியா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த தரவுத்தளத்தில் தற்போது 98,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, வேலைக்காக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், விமானம் மூலம் உலருணவு நிவாரணங்களை அனுப்பி வைப்பதற்கும், தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 

ஜோர்தான், கட்டார் போன்ற நாடுகளில், கொவிட்-19 நெருக்கடியால் வேலைவாய்ப்பு இழந்தவர்களுக்கு வேறு வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ; குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment