ETI நிறுவன பணிப்பாளர் சபைக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யுமாறு மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

ETI நிறுவன பணிப்பாளர் சபைக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யுமாறு மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை

முறையற்ற வகையில் பணம் திரட்டிய குற்றச்சாட்டின் கீழ் ETI நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு எதிராக குற்றவியல் வழக்கை தாக்கல் செய்யுமாறு ETI மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளது.

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட குறித்த அறிக்கையில் ETI வைப்பாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான 08 பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ETI பணிப்பாளர் சபை வைப்பாளர்கள் குறித்து சிந்திக்காது, மெத்தனப் போக்காக செயற்பட்டு, பாரதூரமான குற்றத்தை இழைத்துள்ளதாக மூவரடங்கிய குழு தெரிவித்துள்ளது.

இதற்கு நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் பணிப்பாளர் சபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சொத்துக்களை விற்பனை செய்த போது, சட்டங்களை மீறி செயற்பட்டமையூடாக ETI நிறுவனம் வைப்பாளர்களை ஏமாற்றியுள்ளதாகவும் ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவியல் தண்டனை சட்டக்கோவைக்கு அமைய, நம்பிக்கையை சீர்குலைத்தமை, மோசடி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழும் ETI பணிப்பாளர் சபைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

லீசிங் மற்றும் நிதி நிறுவனம் தொடர்பில் நாட்டில் காணப்படும் சட்ட வழு காரணமாக அவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாகவும் ETI மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு தெரிவித்துள்ளது.

இதனால் லீசிங் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் குறித்த குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 04 விடயங்கள் குறித்து ஜனாதிபதி செயலணி மீளாய்வு செய்வதாக ஜனாதிபதி சட்டப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்துள்ளார். மீளாய்வு செய்யப்படும் விடயங்களை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ETI மோசடியால் 42,000 வைப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 32,000 பேருக்கான நிவாரணங்களுக்குரிய திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. ஏனைய 10,000 வைப்பாளர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான திட்டங்கள் தயார் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ETI மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் K.D. சித்ரசிறி நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் மற்றும் சிரேஷ்ட வங்கியாளர் D.M. குணசேகர ஆகியோர் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

No comments:

Post a Comment