நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்

நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர் பகுதியான கன்ஃபன்ஸ்-செயிண்டி-ஹனோரின் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி (47). 

இவர் கடந்த 5ம் திகதி தனது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியுள்ளார். கருத்து சுதந்திரம் தொடர்பான வகுப்பு நடந்த விவாதத்தில் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை காட்டியுள்ளார்.

அப்போது அந்த வகுப்பில் படித்து வந்த ஒரு மாணவனின் பெற்றோர் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை காட்டக் கூடாது என சாமுவேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சாமுவேலுக்கு பல தரப்பில் இருந்தும் எச்சரிக்கையும் வந்துள்ளது.

இதற்கிடையில், பள்ளிக்கூடம் அருகே கடந்த 16ம் திகதி மாலை நடந்து சென்று கொண்டிருந்த சாமுவேல் பெடியை பின் தொடர்ந்து வந்த 18 வயது இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சாமுவேலின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். 

இந்த கொடூர கொலையில் ஈடுபட்டு விட்டு தப்பிக்க முயன்ற ரஷியாவில் உள்ள சிசன்ஸ் பகுதியை பூர்வீகமாக கொண்டு பிரான்சில் வசித்து வரும் 18 வயது இளைஞனை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியர் கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான், இந்த தாக்குதல் ‘இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்’ என கூறினார். மேலும், ’ஆசிரியர்களுக்கு பிரான்ஸ் துணைநின்று பாதுகாக்கும்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை காட்டியதால் தலை துண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார்.

அதன் பின் பேசிய இம்மானுவேல், ‘பிரான்ஸ் நாடு அதன் சுதந்திரத்தை கைவிடாது. கேலிச் சித்திரங்கள் (நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள்) வெளியிடுவதை கைவிடப் போவதில்லை. இஸ்லாமிய மதவாதிகளுக்கு நமது எதிர்காலம் வேண்டும் என்பதால் சாமுவேல் கொல்லப்பட்டார். அவர்களுக்கு நமது எதிர்காலம் ஒருபோதும் கிடைக்காது’ என தெரிவித்தார்.

இம்மானுவேல் மெக்ரானின் கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கூறுகையில், ‘மெக்ரான் மனநல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். 

ஏற்கனவே, கீரிஸ் - துருக்கி கடல் பரப்பு விவகாரம், அர்மீனியா - அசர்பைஜான் விவகாரத்தில் துருக்கி - பிரான்ஸ் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இதனால், எர்டோகனின் கருத்தையடுத்து துருக்கியில் உள்ள தனது தூதுவரை பிரான்ஸ் திரும்பப் பெற்றுக் கொண்டது. பிரான்ஸ் ஜனாதிபதி மீதான துருக்கி ஜனாதிபதி எட்ரோகனின் கருத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இம்மானுவேலின் கருத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்து ‘இஸ்லாம் மீதான தாக்குதல்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, இஸ்லாமிய நாடுகளில் பிரான்ஸ் நாட்டின் பொருட்களை புறக்கணிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

இதையடுத்து, இஸ்லாமிய நாடுகளில் பிரான்ஸ் நாட்டில் தயாராகும் பொருட்கள் விற்பனை பெருமளவு குறைந்து, கடைகளில் அந்த பொருட்கள் வைக்கும் இடங்கள் காலியாக உள்ளது. 

முன்னதாக, நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள சார்லி ஹேப்டோ என்ற பத்திரிக்கை வெளியிட்டது. 

இதையடுத்து, அந்த பத்திரிக்கை கட்டிட வளாகத்திற்கு வெளியே கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. அந்த கொடூர தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆசிரியர் சாமுவேல் தலை துண்டித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment