அல்ஜீரிய நாட்டின் ஜனாதிபதி உடல்நலக்குறைவு காரணமாக பிரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பல நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் என பல தலைவர்களும் இலக்காகி வருகின்றனர்.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் ஜான்சன், பிரேசில் ஜனாதிபதி போல்சனேரோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு பின்னர் அதில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், அல்ஜீரிய நாட்டின் ஜனாதிபதியாக செயல்பட்டு வருபவர் அப்தல்மஜித் டெம்போனி. 75 வயதான இவருக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்துல் மஜித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால், அவர் கொரோனா பரிசோதனை செய்யவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதி அப்துல் மஜித்திற்கு கடந்த செவ்வாய்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அல்ஜீரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால், சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததையடுத்து, ஜனாதிபதி அப்துல் மஜித் மேல் சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.
தற்போது அவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், ஜனாதிபதிக்கு கொரோனா பரவியுள்ளதா? என்ற தகவலை அல்ஜீரிய அரசு தரப்பு தெரிவிக்க மறுத்துவிட்டது.
ஆனாலும், ஜனாதிபதிக்கு கொரோனா பரவியிருக்கலாம் எனவும், அதனால்தான் சிகிச்சைக்காக அவர் பிரான்ஸ் சென்றுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment