தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் சமூகத்தினுள் பரவலடைவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
அத்துடன், மினுவாங்கொடயைத் தவிர நாட்டில் தொற்றாளர் கொத்தணிகள் தற்போது காணப்படவில்லை என்றும் கடந்த காலத்தில் பத்து முதல் பதினைந்தாக அதிகரித்த தொற்றாளர் கொத்தணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது மக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை. நிலைமைகள் மோசமடைவதை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறிகள் மற்றும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் சமூகத்தில் இருப்பார்களாயின் அச்சமின்றி தாமாகவே முன்வந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக வேண்டும்.
கடந்த நாட்களில் காணப்பட்ட தொற்றாளர்கள் கொத்தணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. தற்போது நாட்டில் ஒரேயொரு தொற்றாளர்கள் கொத்தணி மட்டுமே காணப்படுகின்றது. அது மினுவாங்கொடையில் மட்டுமே காணப்படுகின்றது.
அதேபோன்று தற்போதைய பரவல் சமூகப் பரவலாக மாறுவதற்கு முன்னதாக அதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக கம்பஹா மாட்டத்தில் பொது நிகழ்வுகளில் ஒன்று கூடுதல், தனியார் வகுப்புக்களுக்கு செல்வதை தவிர்த்தல் போன்ற பொதுமக்கள் அதிகளவான நடமாட்டத்தினை தவிர்த்தல் என்பன அவசியமாகின்றன.
இதேவேளை, ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களில் தொற்றுக்குள்ளானவர்கள் உயர்வடைந்து செல்வதையிட்டு பொதுமக்கள் அச்சமடைய வேண்டியதில்லை. பொதுமக்கள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றவதே முதற்கடமையாகின்றது என்றார்.
வீரகேசரி
No comments:
Post a Comment