அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் நேற்றுமுன்தினம் மாலை கருப்பின வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் இரண்டு பேர் அந்த வாலிபரிடம் துப்பாக்கியை காட்டி கத்தியை கீழே போடும்படி எச்சரித்தனர்.
ஆனால் அந்த வாலிபர் பொலிஸாரை நோக்கி முன்னேறி வந்ததால் அதிகாரிகள் 2 பேரும் அவரை துப்பாக்கியால் பலமுறை சுட்டனர். இதில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
விசாரணையில் கறுப்பினத்தைச் சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் வால்டர் வாலஸ் (வயது 27) என்பது தெரியவந்தது.
இதற்கிடையில் பொலிஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அந்நகரில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி பொலிஸாருக்கு எதிராக போராடினர்.
இந்தப் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. கற்கள், கண்ணாடி பொட்டில்கள் உள்ளிட்டவற்றால் பொலிஸாரை தாக்கிய போராட்டக்காரர்கள் பொலிஸாரின் கார்களுக்கும் தீ வைத்தனர்.
இந்த வன்முறையில் பொலிஸ் அதிகாரிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த நகரில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.
No comments:
Post a Comment