சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 20 ஐ முழுமையாக எதிர்க்கும் : சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 17, 2020

சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 20 ஐ முழுமையாக எதிர்க்கும் : சுமந்திரன்

(ஆர்.ராம்)

20ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக எதிர்ப்பதென்ற தீர்மானத்தில் உறுதியாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 20 இற்கு எதிரான கூட்டுச் செயற்பாடுகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எதிர்வரும் 21ஆம் 22ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் 20ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 20ஆவது திருத்தத்தினை ஆரம்பத்திலிருந்தே முற்று முழுதாக எதிர்க்கிறோம். அதனை ஒட்டு மொத்தமாக ஜனநாயக விரோத செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது. அது மட்டுமில்லாமல் அதிகாரப் பகிர்வு தத்துவத்தை மீறியதாகவே 20ஆவது திருத்தம் உள்ளது. 

அரச அதிகாரங்கள் மூன்று நிறுவனங்களிடம் இருக்க வேண்டும். அதில் ஒவ்வொன்றும் இன்னொன்றினுடைய செயற்பாட்டை மேற்பார்வை செய்ய வேண்டும். ஆனால் 20ஆவது திருத்தம் அவற்றை எல்லாம் மீறி அனைத்து அதிகாரங்களும் ஒரு நிறுவனத்திடம் குறிப்பாக நபர் ஒருவரிடத்தில் அதிகாரங்களை கொடுப்பதாகவே அமைகிறது. இதனால் இந்த திருத்தினை ஆரம்பத்திலிருந்தே நாம் எதிர்த்து வருகின்றோம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. நாம் அதில் உள்ள அனைத்து ஏற்பாடுகளையும் எதிர்ப்பதாக கூறியுள்ளோம். 

ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானம் பாராளுமன்றத்திற்கு அனுப்பபட்டுள்ளது. அது எவ்வாறாக இருந்தாலும் ஒட்டு மொத்தமாக 20 ஐ எதிர்ப்பதே எமது நிலைப்பாடாகும். 

இந்த நிலைப்பாட்டை உடைய முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்களுடனும் பேச்சுக்களை முன்னெடுத்தபோது இந்த விடயத்தில் கூட்டிணைந்து எதிர்ப்பினை வெளியிடுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment